நான் சி.எம்-ஆக பதவியேற்கும் போது நீ புடவை கட்டி வரணும் – பிரபல நடிகையை கிண்டலடித்த மலையாள நடிகர்

மலையாள நடிகர் தியான் ஸ்ரீனிவாசன், நடிகை நவ்யா நாயரை நோக்கி நகைச்சுவையாகப் பேசியது தற்போது இணையத்தில் பெரும் பேசு பொருளாகியுள்ளது.

மலையாளத்தில் 40-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்து பிரபலமானவர் தியான் ஸ்ரீனிவாசன். இவர் மறைந்த பிரபல நடிகர் ஸ்ரீனிவாசனின் இளைய மகன், மற்றும் நடிகர் வினீத் ஸ்ரீனிவாசனின் தம்பி ஆவார்.

அவர் நடிக்கும் ‘விசிட்டர்’ படத்தின் அறிவிப்பு விழா கொச்சியில் நடைபெற்றது. இதில் படத்தில் நடிக்கும் நவ்யா நாயர், அஜு வர்கீஸ், ரோனி டேவிட் உள்ளிட்ட படக்குழுவினர் மற்றும் இயக்குநர் ராகுல் முரளிதரன் ஆகியோர் கலந்து கொண்டனர். சிறப்பு விருந்தினராக திலீப் பங்கேற்றார்.

இந்த நிகழ்வில் தியான் பேசுகையில் நகைச்சுவையாக நடிகை நவ்யா நாயர் குறித்து பேசினார். அவர் பேசியதாவது, “நவ்யா மீதான எனது அன்பை வெளிப்படுத்தியதன் மூலமே எனது நேர்காணல் பயணத்தை நான் தொடங்கினேன். இப்போது அவருக்கு திருமணமாகி இப்போது ஒரு மகனும் இருக்கும் சூழலில் நாங்கள் ஒரு படத்திற்காக இணைகிறோம். இருப்பினும், நான் முதலமைச்சராக பதவியேற்கும் அந்தத் தருணத்தில், நடிகை நவ்யா முதல் வரிசையில் புடவை கட்டியபடி கண்கலங்கி உட்கார்ந்திருப்பார்” என்றார்.

இதனிடையே தியானின் பேச்சுக்கு பதிலளித்த நடிகை நவ்யா, “தியான், நீ விரும்பியபடியே முதலமைச்சர் ஆகும்போது, நான் பச்சை நிற பார்டர் கொண்ட வெள்ளைச் சேலையையும் வைர மாலையையும் அணிந்து, கண்ணீருடன் முதல் வரிசையில் அமர்ந்து, வெற்றி முழக்கமிட்டு உன்னை உற்சாகப்படுத்துவேன். முதல் வரிசையில் எனக்கும் ஓர் இருக்கை ஏற்பாடு செய்ய மாட்டாயா?” என நகைச்சுவையாகப் பேசினார்.

தற்போது இந்த வீடியோக்கள் இணையத்தில் வைரலாகி பெரும் பேசுபொருளாகியுள்ளது. தமிழகத்தில் முதல்-அமைச்சர் விஜய், பதவியேற்கும் போது நடிகை திரிஷா முதல் வரிசையில் கண்கலங்கியபடி உட்கார்ந்திருந்த சம்பவத்தை மறைமுகமாகக் கிண்டலடிக்கும் வகையில் தியான் ஸ்ரீனிவாசன் கூறியதாக ரசிகர்கள் கமெண்ட் செய்து வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here