சிரம்பான்:
16-ஆவது நெகிரி செம்பிலான் மாநிலச் சட்டமன்றத் தேர்தல் இன்று காலை மாநிலம் முழுவதும் உள்ள 8 மையங்களில் ஒரே நேரத்தில் நடைபெற்ற வேட்புமனுத் தாக்கலுடன் அதிகாரப்பூர்வமாகத் தொடங்கியது.
தேர்தல் ஆணையம் (EC) விதித்துள்ள விதிமுறைகளின்படி, இன்று காலை 9:00 மணிக்குத் தொடங்கிய வேட்புமனுத் தாக்கல் 10:00 மணிக்கு நிறைவடைந்தது. அதன் பின்னர் தகுதியான வேட்பாளர்களின் இறுதிப் பட்டியலைத் தேர்தல் அதிகாரிகள் முறைப்படி அறிவித்தனர்.
வேட்புமனுத் தாக்கல் முடிவடைந்ததைத் தொடர்ந்து, 14 நாட்களுக்கான அதிகாரப்பூர்வ தேர்தல் பிரசாரம் உடனடியாகத் தொடங்குகிறது. இது ஜூலை 31-ஆம் தேதி நள்ளிரவு 11:59 மணி வரை நீடிக்கும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
நெகிரி செம்பிலான் மாநிலத்திலுள்ள வாக்களிக்க தகுதிபெற்ற மொத்த வாக்காளர்கள் 889,490 பேர்; இதில் சாதாரண வாக்காளர்கள்: 867,151; ராணுவத்தினர் & அவர்களின் துணைகள் 16,884; போலீசார் & அவர்களின் துணைகள் 5,455 ஆகியோர் அடங்குவர்.
வரும் ஆகஸ்ட் 1 பொது வாக்குப்பதிவு நாளாக தேர்தல் ஆணையம் அறிவித்துள்ள நிலையில், மாநிலத்தில் உள்ள மொத்தம் 36 சட்டமன்றத் தொகுதிகளையும் கைப்பற்ற அரசியல் கட்சிகள் தங்களின் மூத்த தலைவர்களையும் புதிய முகங்களையும் களமிறக்கியுள்ளன:
இதில் பக்காத்தான் ஹரப்பான் (PH): அனைத்து 36 தொகுதிகளிலும் போட்டியிடுகிறது. தேசிய முன்னணி (BN): 25 தொகுதிகளில் மட்டுமே களமிறங்குகிறது. எஞ்சிய 11 தொகுதிகளில் ஒரு தந்திரோபாய உடன்பாட்டின் அடிப்படையில் அது வேட்பாளர்களை நிறுத்தவில்லை.
பெரிகாத்தான் நேஷனல் (PN): 11 தொகுதிகளிலும், பெர்சத்து (Bersatu) கட்சி 24 தொகுதிகளிலும் (இதில் இரண்டு ‘உரிமை’ – Urimai சின்னத்தின் கீழ்) போட்டியிடுகின்றன.அதேநேரம் மலேசிய பூர்வகுடி மக்கள் கட்சி (ASLI), மலேசிய சோசலிச கட்சி (PSM) மற்றும் பெர்ஜாசா (Berjasa) ஆகியவை தலா 1 தொகுதியில் போட்டியிடுகின்றன.
வேட்புமனுத் தாக்கல் தினத்தில் ஆயிரக்கணக்கான ஆதரவாளர்கள் மற்றும் அரசியல் தலைவர்கள் திரள்வார்கள் என்பதால் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. அசம்பாவிதங்களைத் தவிர்க்கவும் அமைதியைப் பேணவும் நெகிரி செம்பிலான் மாநிலத்தின் 4,800 போலீசாருடன், புக்கிட் அமான் தலைமையகத்தைச் சேர்ந்த 1,373 கூடுதல் அதிகாரிகளும் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். எவ்விதத் தூண்டல் அல்லது வன்முறைச் செயல்களிலும் ஈடுபடக் கூடாது எனத் தேர்தல் ஆணையம் எச்சரித்துள்ளது.
மலேசிய வானிலை ஆய்வு மையத்தின் (MetMalaysia) கணிப்புப்படி, இன்று காலை பெரும்பாலான இடங்களில் தெளிவான வானிலை நிலவினாலும், போர்ட்டிக்சன் மற்றும் சிரம்பான் பகுதிகளில் காலை வேளையில் மழையும், பிற்பகலில் மாநிலம் முழுவதும் இடியுடன் கூடிய பலத்த மழையும் பெய்யக்கூடும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
முன்னதாக, கடந்த 2023-ஆம் ஆண்டு நடந்த தேர்தலில் PH 17 இடங்களையும், BN 14 இடங்களையும், PN 5 இடங்களையும் வென்றிருந்தது குறிப்பிடத்தக்கது.




















