பெட்டாலிங் ஜெயாவின் திடீர் வெள்ளம்: வெறும் அனுதாபம் தேவையில்லை; தெளிவான காலக்கெடுவுடன் விளக்கம் தேவை – எம்பி லீ சியான் சுங் அதிரடி!

கோலாலம்பூர்:

பெட்டாலிங் ஜெயா பகுதியில் நேற்று ஏற்பட்ட திடீர் வெள்ளப்பெருக்கு குறித்துப் பெட்டாலிங் ஜெயா நாடாளுமன்ற உறுப்பினர் லீ சியான் சுங், சம்பந்தப்பட்ட உள்ளூர் அதிகார அமைப்பான பெட்டாலிங் ஜெயா மாநகராண்மைக் கழகத்திடம் (MBPJ) இருந்து இதுவரை முறையான எந்தப் பதிலும் கிடைக்கவில்லை என்று தெரிவித்துள்ளார்.

கடந்த மே 6-ஆம் தேதி இப்பகுதியில் ஏற்பட்ட கடுமையான வெள்ளத்தைத் தொடர்ந்து, நேற்று மீண்டும் அதே போன்றதொரு திடீர் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுப் பொதுமக்களைப் பாதித்துள்ளது.

மே மாத வெள்ளத்திற்குப் பிறகு, சுங்கை பெஞ்சாலா மற்றும் சுங்கை கிள்ளான் ஆகிய ஆறுகளின் வழித்தடங்களில் வெள்ளத்தடுப்புச் சுவர்கள் மற்றும் நீர் வழிந்தோடும் கட்டுப்பாட்டு அமைப்புகளை மேம்படுத்த நீண்ட காலத் திட்டங்களை வைத்துள்ளதாக MBPJ தெரிவித்து இருந்தது.

ஆனால், கடந்த இரண்டு மாதங்களாக அந்தத் திட்டங்களின் தற்போதைய நிலை என்ன என்பது குறித்துப் பாதிக்கப்பட்ட வணிக உரிமையாளர்களுக்கோ அல்லது குடியிருப்பாளர்களுக்கோ எவ்வித விளக்கமும் அதிகாரப்பூர்வமாக வழங்கப்படவில்லை என்று எம்பி லீ சியான் சுங் குற்றம் சாட்டியுள்ளார்.

வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட பகுதிகளை நேரில் பார்வையிட்ட பின் லீ சியான் சுங் வெளியிட்ட அறிக்கையில்: “வெள்ளம் வடிந்த பிறகு அங்கு மிஞ்சுவது வெறும் சேறும் சகதியும் மட்டுமல்ல; மீண்டும் மீண்டும் ஒரே துயரத்தை எதிர்கொள்ளும் மக்களின் ஏமாற்றமும் சோர்வும்தான். ஒவ்வொரு முறையும் வெள்ளம் வரும்போது அவர்கள் தங்களின் சொந்தப் பணத்தைச் செலவழித்துச் சுத்தப்படுத்தவும், சேதங்களைச் சரிசெய்யவும் வேண்டியுள்ளது. இந்த நிலை இன்னும் எவ்வளவு காலத்திற்கு நீடிக்கும்?” என்று கேள்வி எழுப்பியுள்ளார்.

பாதிக்கப்பட்ட மக்களுக்கு வெறும் ஆறுதலும் அனுதாபமும் மட்டும் போதாது என்று குறிப்பிட்ட அவர், வெள்ளத்திற்கான உண்மையான காரணம், தற்போது மேற்கொள்ளப்பட்டு வரும் பணிகளின் அறிக்கை மற்றும் இவற்றுக்கான தெளிவான காலக்கெடுவை (Timeline) MBPJ வெளிப்படையாக அறிவிக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.

மேலும், இப்பிரச்சனைக்கு நிரந்தரத் தீர்வு காணும் பொருட்டு, பாதிக்கப்பட்ட வணிக வளாக உரிமையாளர்கள் மற்றும் எம்பிஜே அதிகாரிகளுக்கு இடையேயான கலந்துரையாடல் கூட்டம் ஒன்றிற்குத் தாம் ஏற்பாடு செய்யவுள்ளதாகவும் லீ சியான் சுங் தெரிவித்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here