கோலாலம்பூர்:
‘மலேசியாவிற்கு வருகை தரும் ஆண்டு 2026’ (Visit Malaysia 2026) கலைத் திட்டத்தின் கீழ், மலேசியாவின் கலை மற்றும் பாரம்பரியத்தை உலகிற்குப் பறைசாற்றும் ‘சித்ரவர்ணா 2026’ கலாச்சார திருவிழா கோலாலம்பூர் டத்தாரான் மெர்டேக்காவில் மிகவும் கோலாகலமாகத் தொடங்கியது.
பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் இந்த மூன்று நாள் கலைத் திருவிழாவைத் தொடங்கி வைத்தார். சுற்றுலாக் கலை மற்றும் பண்பாட்டுத் துறை அமைச்சர் டத்தோஸ்ரீ தியோங் கிங் சிங் உட்படப் பல முக்கியப் பிரமுகர்கள் இந்நிகழ்வில் கலந்து கொண்டனர்.
சீனா, இந்தியா, ஜப்பான், சிங்கப்பூர், இத்தாலி, பிரான்ஸ் உள்ளிட்ட 12 நாடுகளிலிருந்து 700-க்கும் மேற்பட்ட வெளிநாட்டுச் சுற்றுலாப் பயணிகள் சிறப்புப் பயணத் திட்டங்கள் மூலம் இந்தத் தொடக்க விழாவில் நேரடியாகப் பங்கேற்றனர்.
‘ரித்மா வாரிசான், நாடி நுசா டான் பாங்சா’ (Ritma Warisan, Nadi Nusa dan Bangsa) என்ற கருப்பொருளில் நடைபெறும் விழாவில், மலேசிய மாநிலங்கள் மற்றும் கூட்டரசு பிரதேசங்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் 3,500 கலைஞர்கள் கலந்துகொண்ட வண்ணமயமான அணிவகுப்பு சுல்தான் அப்துல் சமத் கட்டடத்தின் முன்பாக நடைபெற்றது.
பல்லின மக்களின் பாரம்பரியக் கலை அணிவகுப்பு, 70-க்கும் மேற்பட்ட பாரம்பரிய உணவு மற்றும் பானங்கள், 20-க்கும் மேற்பட்ட கலாச்சாரப் பயிற்சி மற்றும் செயல்பாட்டு மையங்கள், மற்றும் 10-க்கும் மேற்பட்ட கைவினைப் பொருட்கள் மற்றும் ஓவியக் கூடங்கள் என்பவற்றை மையமாகக் கொண்டு சித்ரவர்ணா விழா ஒழுங்கமைக்கப்பட்டுள்ளது.
சுற்றுலாப் பயணிகள் பாத்டிக் (Batik) ஓவியம் வரைதல், கெத்துப்பாட் நெய்தல் மற்றும் பாரம்பரிய சமையல் கலை போன்ற பல்வேறு நிகழ்வுகளில் நேரடியாகப் பங்கேற்று மகிழ்ந்தனர்.
மேலும், வாணி காய்ரி , டாக்டர் சூ வின்சி , சாந்தேஷ் குமார் , எர்னி ஜாக்ரி, ஐனா அப்துல் உட்பட பல பிரபல மலேசியக் கலைஞர்களின் கலை நிகழ்ச்சிகளும் இந்த விழாவிற்கு மேலும் மிளிர்கூட்டின.


















