கோலாலம்பூர்:
மலேசியாவிலும் சிங்கப்பூரிலும் அண்மைக் காலமாக மின்னல் தாக்கி உயிரிழக்கும் சம்பவங்கள் அதிகரித்து வரும் நிலையில், இடியுடன் கூடிய மழை பெய்யும்போது பொதுமக்கள் கடைப்பிடிக்க வேண்டிய பாதுகாப்பு வழிமுறைகள் குறித்த விழிப்புணர்வை மலேசிய வானிலை மையம் மீண்டும் எச்சரித்துள்ளது.
மலாக்காவில் திறந்தவெளியில் கால்பந்து விளையாடிக் கொண்டிருந்த இளைஞர் ஒருவரும், சிங்கப்பூரில் கயாக்கிங் (Kayaking) படகுச் சவாரியில் ஈடுபட்ட மற்றொருவரும் மின்னல் தாக்கி பரிதாபமாக உயிரிழந்தனர். இச்சம்பவங்களைத் தொடர்ந்து, அதன் தலைமை இயக்குநர் முகமட் ஹிஷாம் முகமட் அனிப் மின்னல் ஆபத்துகள் குறித்தும், தவிர்க்க வேண்டிய தவறான நடவடிக்கைகள் குறித்தும் முக்கிய எச்சரிக்கைகளை விடுத்துள்ளார்.
லேசான தூறல் போடும்போதோ அல்லது மழை முழுமையாகத் தொடங்குவதற்கு முன்பாகவோ கூட மின்னல் தாக்கும் அபாயம் உண்டு. எனவே, தூரத்தில் இடிச்சத்தம் கேட்டவுடனேயே திறந்தவெளிகளில் விளையாடுவதையோ அல்லது வேலை செய்வதையோ உடனடியாக நிறுத்திவிட வேண்டும்.
இடி-மின்னல் அறிகுறிகள் தென்பட்ட உடனே திறந்தவெளிகளை விட்டு வெளியேறி, உடனடியாகக் கான்கிரீட் கூரையிலான பாதுகாப்பான கட்டிடங்களுக்குள் தஞ்சமடைய வேண்டும்.
மின்னலின் போது மரங்களுக்குக் கீழேயோ அல்லது தற்காலிகக் கூடாரங்களிலோ ஒதுங்குவது பாதுகாப்பானது என்ற தவறான நம்பிக்கை பலரிடம் உள்ளது. இது குறித்து எச்சரித்த ‘மெட்மலேசியா’ தலைமை இயக்குநர், திறந்தவெளியில் தனியாக நிற்கும் மரங்கள், தற்காலிகக் கூடாரங்கள் மற்றும் பேருந்து நிழற்குடைகள் மின்னல் தாக்குதலில் இருந்து எவ்வித பாதுகாப்பையும் தராது; மாறாக, அவை மின்னலை ஈர்க்கும் அபாயம் கொண்டவை என்றார்.
மேலும் திறந்தவெளியில் வேறு வழியில்லாத பட்சத்தில், மூடிய உலோகக் கூரை கொண்ட கார்களுக்குள் இருப்பது பாதுகாப்பானது. காரின் உலோக உடற்பகுதி மின்னல் தாக்கினாலும் மின்சாரத்தை உடனுக்குடன் கடத்தி, பாதுகாப்பாகத் தரையில் பாய்ச்சும் திறன் கொண்டது.
எனவே, மழைக்காலத்தில் பொதுமக்கள் தேவையற்ற அலட்சியத்தைத் தவிர்த்து, இடி-மின்னல் எச்சரிக்கைகளை முழுமையாகப் பின்பற்றி விழிப்புடன் இருக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.























