–சென்னை உயர் நீதிமன்றம் தீர்ப்பு
இலங்கைத் தமிழரான சந்திரகுமார் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கடந்த 2013- ஆம் ஆண்டு ஆக.15 முதல் 24 வரை பூந்தமல்லி சிறப்பு முகாமில் உண்ணாவிரதம் இருந்தார். இதையடுத்து தற்கொலை முயற்சியில் ஈடுபட்டதாக அவர் மீது பூந்தமல்லி போலீஸார் வழக்கு பதிவு செய்தனர். இந்த வழக்கில் 2016-இல் கீழமை நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது.
இந்நிலையில், தன் மீது பதியப்பட்ட வழக்கை ரத்து செய்யக் கோரிஉயர் நீதிமன்றத்தில் சந்திரகுமார் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கு நீதிபதி என்.ஆனந்த் வெங்கடேஷ் முன்பு விசாரணைக்கு வந்தது.வழக்கை விசாரித்த நீதிபதி,”கோரிக்கைகளுக்காக உண்ணாவிரதம் இருப்பது தற்கொலை முயற்சி கிடையாது. தற்கொலைமுயற்சிக்கான அதிகபட்ச தண்டனையே ஓராண்டு காலம்தான்.
அப்படி இருக்கும்போது இந்த வழக்கில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டு 3 ஆண்டுகளுக்கு மேலாகியும் இதுவரை கீழமை நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படவில்லை.
வழக்கை காலதாமதம் செய்வதால் எந்தப் பலனும் ஏற்படப் போவதில்லை” எனக் கூறி, மனுதாரர் மீதான வழக்கை ரத்து செய்து தீர்ப்பளித்துள்ளார்.