கூச்சிங், செரியானில் இன்னும் தொடரும் புகைமூட்டம்: API அளவு 300-ஐத் தாண்டிப் பதிவு!

கோலாலம்பூர்:

சரவாக் மாநிலத்தில் கடந்த சில நாட்களாகக் கடுமையாக நிலவி வந்த புகைமூட்டச் சூழலில் (Haze Conditions) இன்று (செப்டம்பர் 2) சற்றே முன்னேற்றம் காணப்பட்டுள்ளது. நேற்று 6 இடங்களில் ‘அபாயகரமான’ (Hazardous) நிலையில் இருந்த காற்றுத் தூய்மைக்கேட்டுச் சுட்டெண் (API), இன்று காலை 9.00 மணி நிலவரப்படி 2 இடங்களாகக் குறைந்துள்ளது.

சுற்றுச்சூழல் துறையின் காற்றுத் தூய்மைக்கேட்டுச் சுட்டெண் நிர்வாக முறைமை (APIMS) வெளியிட்ட தரவுகளின்படி, கூச்சிங் (318) மற்றும் செரியான் (316) ஆகிய இரு பகுதிகள் மட்டுமே இன்னும் ‘அபாயகரமான’ மண்டலத்தில் (API 300-க்கும் மேல்) தொடர்கின்றன.

நேற்று அபாயகரமான நிலையில் இருந்த 4 பகுதிகளான சமராகான்: 297 (நேற்று 369), சிபு: 289 (நேற்று 321),
சாரிகே: 279 (நேற்று 340), ஸ்ரீ அமான்: 210 (நேற்று 362), இன்று ‘மிகவும் ஆரோக்கியமற்ற’ நிலைக்குக் குறைந்துள்ளன.

மேலும், மூக்கா (239) மற்றும் பின்டுலு (225) ஆகிய இடங்கள் தொடர்ந்து ‘மிகவும் ஆரோக்கியமற்ற’ நிலையிலேயே நீடிக்கின்றன.

சரவாக்கில் நிலவரம் சற்றே சீரடைந்து வரும் அதே வேளையில், நாட்டின் பிற பகுதிகளில் காற்றுத் தரம் ‘ஆரோக்கியமற்ற’ நிலையிலுள்ளது. இதில் சிலாங்கூர்: ஜொஹான் செத்தியா (162), சபா: கிமானிஸ் (175), கெனிங்காவ் (174), கோத்தா கினபாலு பாலிடெக்னிக் (185), கோத்தா கினபாலு (179), சண்டாக்கான் (152), தாவாவ் (120), நெகிரி செம்பிலான் & புத்ராஜெயா: நிலாய் (138), சிரம்பான் (116), புத்ராஜெயா (152) என்பவை அடங்கும்.

நாடு முழுவதும் உள்ள எந்தவொரு காற்றுக் கண்காணிப்பு நிலையத்திலும் ‘நல்ல’ (Good) காற்றுத் தரம் பதிவாகவில்லை என்றும், எஞ்சிய பகுதிகள் அனைத்தும் ‘மிதமான’ (Moderate) அளவிலேயே உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here