வானில் திடீரென தோன்றிய பச்சை ஒளி

வானில் நடக்கும் ஒவ்வொரு மாற்றங்களும் நம்மை அதிசயப்பட வைத்துக் கொண்டே இருக்கும். ஆச்சரிய படுத்திகொண்டே இருக்கும். அதைக் கண்டறிய தான் உலக அளவில் பல அரசுகளும், தனியார் நிறுவனங்களும் ஆராய்ச்சிக் கூடங்களை நிறுவி ஆய்வு செய்து வருகிறது. கால மாற்றத்தால் புவிக்குள் மாற்றங்கள் ஏற்படுவது போல், இந்த விரிந்த அண்டத்திலும் மாற்றங்களும் அதிசயங்களும் நடந்து கொண்டே இருக்கின்றன.

முன்பெல்லாம் துருவபகுதிகளின் அருகே சூரிய அலைகள், சூரிய புயல் காற்றுகள் புவியின் வளிமண்டலத்தின் வழியே செல்லும்போது புவியின் காந்த அலைகளோடு சேர்ந்து அரோரா(aurora) எனப்படும் துருவ வெளிச்சங்கள் (polar lights)தெரியும். பச்சை நிறம் , நீல நிறங்களில் ஒளிகற்றைகள் காணப்படும். இப்போது எல்லாம் இதுபோன்ற சம்பவங்கள் பூமியின் மத்திய பகுதி நாடுகளிலேயே தெரிய ஆரம்பித்து விட்டது.

சில மாதங்களுக்கு முன்னர் டெக்சாஸ் இளைஞர் ஒருவர் பசிபிக் பெருங்கடலில் விமானம் ஓட்டும் போது இரவில் பச்சை நிற ஒளியை கண்டுள்ளார், அதை படம்பிடித்து வலைத்தளங்களில் பதிவிட்டிருந்தார்.

அதே போல் , கடந்த மே 16 அன்று தென்னாபிரிக்காவின் மிசோரி மாநிலத்தில் இரவு வானத்தில் ஒரு பிரகாசமான ஒளிப் பந்தைப் பலர் பார்த்துள்ளனர். அதை பார்த்த மக்கள் பெரும் ஆச்சரியத்திலும் குழப்பத்திலும் மூழ்கினர். அந்த அடையாளம் காணப்படாத பறக்கும் பொருள் ( UFO ) ஒரு மணி நேரம் வானத்தில் நகர்ந்தது போல் தெரிந்துள்ளது. வானத்தில் ஒரு மணி நேரம் பிரகாசமான ஒளி தெரிந்த பின்னர் திசை மாறி சென்றுள்ளது. அது இன்னதென்று கணிக்க முடியவில்லை என்று மக்கள் தங்கள் பதிவுகளில் எழுதியிருந்தனர்.

மீண்டும் சென்ற வாரம் தென்னாப்பிரிக்காவில் உள்ள பீட்டர்மரிட்ஸ்பர்க்கில், வானத்தில் நீண்ட பச்சை ஒளியைக் கண்ட பலர் குழப்பமடைந்தனர். அது விண்கல்லின் எரிநிலை ஒளியா, விண்கற்கள் வளிமண்டத்தை ஒட்டிப்போவதால் ஏற்பட்ட ஒளியா, இல்லை ஏலியன் ஊர்திகளா, நம் பூமியை தாக்க வந்த பொருளா என பல யுகங்களையும் கதைகளையும் தென்னாபிரிக்க மக்கள் சமூக ஊடகங்களில் பதிவிட்டு வருகின்றனர். ஆனால் இன்று வரை அந்த  பச்சை ஒளி எதனால் வந்தது என்ற கேள்விக்கு பதில்  கிடைக்கவில்லை. அது குறித்த ஆய்வுகள் நடந்து கொண்டு இருக்கிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here