தன் தந்தை தன் அம்மா, சகோதரியை சுட்டுக் கொன்று, தன்னையும் சுட்டதுடன் தற்கொலை செய்து கொண்டது பற்றி பேசியிருக்கிறார் நடிகரும், இயக்குநரும், தயாரிப்பாளருமான கமல் சாதனா. அவருக்கு நடந்த கொடுமை பற்றி ரசிகர்கள் ஃபீல் பண்ணுகிறார்கள்.
1992ம் ஆண்டு வெளியான பேஹுதி இந்தி படம் மூலம் நடிகரானவர் கமல் சாதனா. அந்த படத்தில் அவருக்கு ஜோடியாக நடித்தார் கஜோல். பேஹுதி படம் எதிர்பார்த்தபடி ஓடவில்லை. இருந்தாலும் கஜோலும், கமல் சாதனாவும் நல்ல பெயர் எடுத்தார்கள். பேஹுதியை அடுத்து திவ்ய பாரதியுடன் சேர்ந்து ரங் படத்தில் நடித்தார்.
அதன் பிறகு பல படங்களில் நடித்தார் கமல். ஒரு கட்டத்தில் நடிப்புக்கு முழுக்கு போட்டார். 15 ஆண்டுகள் கழித்து மீண்டும் நடிக்க வந்தார். கடந்த 2022ம் ஆண்டு ரேவதி இயக்கத்தில் வெளியான சலாம் வெங்கி படம் மூலம் கம்பேக் கொடுத்தார் கமல். முன்னதாக 1990ம் ஆண்டு அக்டோபர் மாதம் 21ம் தேதி கமலின் 20வது பிறந்தநாள் கொண்டாட்டத்துக்கு ஏற்பாடு செய்வது தொடர்பாக அவரின் பெற்றோருக்கு இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.
இதையடுத்து கமலின் தந்தையான இயக்குநர் பிரிஜ் சாதனா தன் மனைவியான நடிகை சயீதா கான், மகள் நம்ரதாவை சுட்டுக் கொலை செய்தார். துப்பாக்கிக் குண்டு சத்தம் கேட்டு ஓடி வந்த கமலையும் சுட்டார். மேலும் தன்னை தானே சுட்டுக் கொண்டு இறந்தார் பிரிஜ் சாதனா. இது குறித்து கமல் சாதனா பேட்டி ஒன்றில் கூறியதாவது, அவர் என்னையும் சுட்டார். துப்பாக்கிக் குண்டு என் கழுத்தின் ஒரு வழியாக வந்து இன்னொரு வழியாக வெளியேறிவிட்டது. நான் பிழைத்துக் கொண்டேன். நான் பிழைத்ததற்கு லாஜிக்கே இல்லை. அந்த துப்பாக்கி குண்டு என் உடம்பில் எந்த நரம்பையும் சேதப்படுத்தாமல் வெளியே வந்திருக்கிறது. நான் பிழைத்துக் கொண்டதற்கு ஒரு காரணம் இருக்கிறது என்றார்.
நடிகராக திரையுலகிற்கு வந்த கமல் தயாரிப்பாளர், இயக்குநர் அவதாரமும் எடுத்தார். கர்காஷ் மற்றும் ரோர்-டைகர்ஸ் ஆஃப் தி சுந்தர்பான்ஸ் ஆகிய இரண்டு படங்களை இயக்கினார். இரண்டு படங்களும் ஓடவில்லை. மேலும் தன் தந்தையின் சூப்பர் ஹிட் படமான விக்டோரியா எண் 203-ஐ ரீமேக் செய்து தயாரிப்பாளர் அவதாரம் எடுத்தார். அந்த படமும் ஓடவில்லை. ஜோதிகாவின் அண்ணன் தான் இந்த கமல் சாதனா. ஜோதிகாவின் தந்தை சந்தர் சாதனாவும், கமலின் தந்தை பிரிஜ் சாதனாவும் சகோதரர்கள் ஆவார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.





















