எங்க நாட்டிலேயே ஹமாஸ் தலைவரை கொன்னுட்டீங்களே.. பழிவாங்காமல் விடமாட்டோம்! இஸ்ரேலை எச்சரித்த ஈரான்

தெஹ்ரான்: ஹமாஸ் தலைவர் இஸ்மாயில் ஹனியே தெஹ்ரானில் படுகொலை செய்யப்பட்டிருப்பதாக ஹமாஸ் தெரிவித்திருக்கிறது. ஏற்கெனவே அவர் மீது பலமுறை கொலை முயற்சிகள் நடத்தப்பட்டிருக்கின்றன. இதில் தப்பி பிழைத்த இஸ்மாயில், இன்று ஈரான் தலைநகரில் நடத்தப்பட்ட தாக்குதலில் கொல்லப்பட்டிருக்கிறார். இந்த படுகொலைக்கு நிச்சயம் பழிவாங்குவோம் என ஈரான் தெரிவித்திருக்கிறது.

இவர் மீது கடந்த 2004ம் ஆண்டு இஸ்ரேல் பாதுகாப்பு படை தாக்குதல் நடத்தியது. வீட்டில் இருக்கும் நேரமாக பார்த்து இவரது வீட்டின் மீது வான்வழித் தாக்குதல் நடத்தப்பட்டது. ஆனால் இந்த தாக்குதலில் அவர் உயிர் பிழைத்துவிட்டார். அதேபோல 2019ம் ஆண்டு காசாவில் இவரது அலுவலகத்தின் மீது தாக்குதல் நடத்தப்பட்டது. இந்த தாக்குதலின்போது அவர் அலுவலகத்தில் இல்லை. எனவே உயிர் பிழைத்துக்கொண்டார். இருப்பினும் இன்று நடத்தப்பட்ட தாக்குதலில் அவர் உயிரிழந்திருக்கிறார்.

ஈரானில் புதிய அதிபர் பதவியேற்க இருக்கிறார். இந்த பதவியேற்பு விழாவுக்கு இஸ்மாயில் வந்திருந்த போது இந்த தாக்குதல் நடத்தப்பட்டிருக்கிறது. இதில் இஸ்மாயில் மற்றும் அவருடைய மெய்பாதுகாவலர் என 2 பேர் படுகொலை செய்யப்பட்டிருக்கின்றனர். இதனை ஹமாஸ் உறுதி செய்திருக்கிறது.

இந்த கொலை தொடர்பாக ஹமாஸ் விடுத்துள்ள அறிக்கையில், “நமது தலைவர் முஜாஹித் இஸ்மாயில் ஹனியே கொல்லப்பட்டதற்காக பாலஸ்தீனிய மக்களுக்கும், அரபு மற்றும் இஸ்லாமிய தேசத்திற்கும், உலகின் அனைத்து சுதந்திர மக்களுக்கும் இரங்கல் தெரிவித்துக்கொள்கிறோம். புதிய ஈரானிய அதிபரின் பதவியேற்பு விழாவில் பங்கேற்ற பின்னர், தெஹ்ரானில் உள்ள அவரது இல்லத்தில் இஸ்ரேலின் துரோகிகளால் நமது தலைவர் கொல்லப்பட்டிருக்கிறார்” என தெரிவித்திருக்கிறது.

அதேநேரம் இந்த தாக்குதலுக்கு நிச்சயம் பதிலடி கொடுக்கப்படும் என்றும் ஹமாஸ் எச்சரித்துள்ளது. இந்த தாக்குதல் பாலஸ்தீன மக்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தும் என்று சர்வதேச அரசியல் விமர்சகர்கள் எச்சரித்துள்ளனர்.

மறுபுறம், இந்த படுகொலைக்கு பழிவாங்குவோம் என ஈரான் தெரிவித்திருக்கிறது. ஈரானின் தலைவர் அயதுல்லா அலி இதுகுறித்து கூறுகையில், “இஸ்மாயில் ஹனியே எங்களுடைய விருந்தாளி. இவர் பல ஆண்டுகளாக இந்த கண்ணியமான போரில் தனது கெளரவமான வாழ்க்கையை தியாகம் செய்ய தயாராக இருந்தார். அவரை இஸ்ரேல் கொன்றுவிட்டது. இதன் மூலம் தனக்கென ஒரு கடுமையான தண்டனையை இஸ்ரேல் தனக்கென உருவாக்கிக்கொண்டிருக்கிறது.

இஸ்ரேலை பழிவாங்குவதை நாங்கள் எங்கள் கடமையாகக் கருதுகிறோம்” என்று கூறியுள்ளார். இதன் மூலம் இஸ்ரேல் மீது ஈரான் நேரடி தாக்குதலில் ஈடுபடக்கூடும் என் என்று சர்வதேச அரசியல் விமர்சகர்கள் கூறியுள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here