கோலாலம்பூர்:
ஜோகூர் பாரு மற்றும் சிங்கப்பூர் இடையிலான பெரிதும் எதிர்பார்க்கப்படும் விரைவு போக்குவரத்து (RTS) ரயில் சேவையைப் பயன்படுத்தும் பயணிகள், ரயிலில் ஏறுவதற்கு முன்னதாக ஒரே ஒரு முறை மட்டுமே குடியுரிமை சோதனைகளை மேற்கொண்டால் போதுமானது என்று சிங்கப்பூர் உள்துறை இணை அமைச்சர் எட்வின் டோங் நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ளார்.
சிங்கப்பூர் உட்லண்ட்ஸ் வடக்கு நிலையத்தில் ரயிலில் ஏறும் பயணிகள், அங்குள்ள சிங்கப்பூர் மற்றும் மலேசிய அதிகாரிகளின் சோதனைகளை அடுத்தடுத்து முடித்துவிட்டால், ஜோகூர் பாரு புக்கிட் சாகர் நிலையத்தை அடைந்ததும் மீண்டும் எந்தச் சோதனையும் இன்றி நேரடியாக வெளியேறலாம்; இதே நடைமுறை மலேசியாவிலிருந்து சிங்கப்பூர் வரும் பயணிகளுக்கும் பொருந்தும்.
இந்த ஆண்டு இறுதியில் தொடங்கப்படவுள்ள இந்த ரயில் சேவை, ஒரு மணி நேரத்திற்கு ஒரு திசையில் 10,000 பயணிகளைக் கையாளும் திறன் கொண்டது என்பதால்,
ஜோகூர் நெரிசல் பெருமளவு குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஐந்து நிமிடப் பயண நேரத்தைக் கொண்ட இந்த சேவையில், ரயிலினுள் நடக்கும் சம்பவங்கள் அந்தந்த எல்லைக்குட்பட்ட நாடுகளால் கையாளப்படும் என்றும், பாதுகாப்பு மற்றும் போதைப்பொருள் தடுப்பு விவகாரங்களில் இரு நாடுகளும் பரஸ்பரம் ஒத்துழைப்புடன் செயல்படும் என்றும் அவர் மேலும் விளக்கமளித்தார்.





















