‘முறைத்துப் பார்த்ததாக’ ஆத்திரம்: கெப்போங் உணவகத்தில் ஒருவரை மூன்று பேர் தாக்கிய அதிர்ச்சி வீடியோ வைரல்!

கோலாலம்பூர்:

கோலாலம்பூர், ஜாலான் பெசார் கெப்போங்கில் உள்ள ஒரு உணவகத்தில் உணவு உண்டு கொண்டிருந்த நபரை, ‘முறைத்துப் பார்த்ததாகக்’ கூறி போதையில் இருந்த ஒருவரும் அவரது நண்பர்களும் கொடூரமாகத் தாக்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சமூக வலைதளங்களில் வைரலாகி வரும் அந்த உணவகத்தின் சிசிடிவி (CCTV) காட்சிகளில், இந்தத் தாக்குதல் பல நிமிடங்கள் நீடிப்பது பதிவாகியுள்ளது.

பாதிக்கப்பட்ட நபர் உணவகத்தில் அமர்ந்து சாப்பிட்டுக் கொண்டிருந்தபோது, அங்கிருந்த ஒரு நபர் போதையில் அவர் அருகில் வந்து திடீரென அவரைத் தாக்கத் தொடங்கினார்.

முதலில் தங்களது நண்பரைத் தடுக்க முயன்ற மற்ற இரு நண்பர்களும், சிறிது நேரத்திலேயே அவர்களும் சேர்ந்து கொண்டு அந்த நபரைத் தாக்கத் தொடங்கினர்.

பாதிக்கப்பட்ட நபரை அவர்கள் கைகளால் குத்தியும், கால்களால் உதைத்தும் தள்ளினர். மேலும், அங்கிருந்த நாற்காலிகள் மற்றும் கெட்டில் (Kettle) போன்ற பொருட்களைக் கொண்டும் அவரைத் தாக்கினர். இறுதியாக, தாக்குதலில் ஈடுபட்ட இருவர் தங்களது நண்பரைச் சமாதானப்படுத்தியபோது, பாதிக்கப்பட்ட நபர் அங்கிருந்து தப்பித்து ஓடினார்.

இந்தச் சம்பவம் குறித்து செந்தூல் மாவட்ட காவல்துறைத் தலைவர் அசிஸ்டண்ட் கமிஷனர் பஸ்ரி சாகோனி கருத்துத் தெரிவிக்கையில், முக்கியக் குற்றவாளி கைது செய்யப்பட்டுள்ளதாகவும், அவர் வரும் வியாழக்கிழமை வரை தடுப்புக்காவலில் வைக்கப்பட்டுள்ளதாகவும் உறுதிப்படுத்தினார்.

“தாக்குதலில் ஈடுபட்டவரும் பாதிக்கப்பட்டவரும் ஒரே உணவகத்தில் சாப்பிட்டுக் கொண்டிருந்தனர். பாதிக்கப்பட்ட நபர் தன்னைத் தவறாக முறைத்துப் பார்த்ததாகக் கருதிய அந்த நபர், மது போதையில் ஆத்திரமடைந்து இந்தத் தாக்குதலை நடத்தியது முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது,” என்று அவர் கூறினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here