மகனின் பிறந்தநாள் விழாவில் சோகம்… மாரடைப்பால் தாய் உயிரிழப்பு

மகனின் பிறந்தநாள் விழாவின்போது தாய் மாரடைப்பால் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சமீப காலங்களாக இளைஞர்களும், குறைந்த வயதுடையவர்களும் மாரடைப்பால் உயிரிழப்பது பொதுமக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகிறது. இந்த நிலையில் குஜராத்தில் தனது 5 வயது மகனின் பிறந்தநாள் விழாவின்போது தாய் மாரடைப்பால் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

வல்சாத் மாவட்டம் வாபி நகரில் உள்ள சர்வாடா பகுதியில் வசிக்கும் தாவல் பரோட் – யாமினிபென் (37 வயது) தம்பதி தங்களது மகனின் 5-வது பிறந்தநாளை கடந்த 14-ந்தேதி சனிக்கிழமை அங்குள்ள ஒரு ஓட்டலில் கொண்டாடினர். மேடையில் தனது மகனுடன் குதூகலமாக இருந்த யாமினிபென் திடீரென மாரடைப்பு ஏற்பட்டு சரிந்து விழுந்தார்.

உடனடியாக அவரது கணவர் மற்றும் உறவினர்கள் அவரை அருகில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் யாமினிபென் இறந்துவிட்டதாக தெரிவித்தனர். இந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பான நெஞ்சை உலுக்கும் சிசிடிவி காட்சிகள் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

அந்த வீடியோவில், மேடையில் தனது மகனுடன் யாமினிபென் மகிழ்ச்சியுடன் இருக்கிறார். அப்போது அருகிலிருந்த பெண் ஒருவரிடம் தனது கையிலிருந்த மகனை கொடுத்துவிட்டு, நெற்றியில் கைவைக்கிறார். அதன் பின்னர், தன் கணவரின் தோளைப் பற்றி பிடிக்க முயன்ற யாமினிபென் முடியாமல் சரிந்து விழும் காட்சிகள் இடம்பெற்றுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here