ஜோகூர், ஸ்கூடாயின் ஜசெக சட்டமன்ற உறுப்பினர் மரினா இப்ராஹிம், நான்கு ஆண்டுகளுக்கும் மேலாக தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதியாகப் பணியாற்றிய பிறகு, அடுத்த மாநிலத் தேர்தலில் தனது தொகுதியில் போட்டியிடப் போவதில்லை என்றும், அரசியலில் இருந்து விலக முடிவு செய்துள்ளதாகவும் அறிவித்துள்ளார். தனது அரசியல் பயணம் முழுவதும் தனக்குத் துணையாக நின்றவர்களுடன் நடத்திய கலந்துரையாடல்களைத் தொடர்ந்து இந்த முடிவை எடுத்ததாக மரினா கூறினார். நான்கு ஆண்டுகளுக்கு முன்பு, சேவை செய்ய வேண்டும் என்ற எளிய ஆனால் அர்த்தமுள்ள நம்பிக்கையுடன் நான் ஸ்கூடாய்க்கு வந்தேன்.
நான் பெரும் பலத்துடன் வரவில்லை, எனக்குப் பின்னால் ஒரு முழுமையான குழுவும் இருக்கவில்லை. மாறாக, நேர்மையான நோக்கங்களுடனும், எனக்கு ஒப்படைக்கப்பட்ட ஒவ்வொரு பொறுப்பையும் எனது திறனுக்கு ஏற்றவாறு சிறப்பாகச் செய்ய வேண்டும் என்ற உறுதியுடனும் வந்தேன். இப்போது, என் இதயத்திற்கு எப்போதுமே நெருக்கமாக இருந்த ஒன்றிற்குத் திரும்ப முடிவு செய்துள்ளேன் – களத்தில் இருப்பது, சமூகத்துடன் ஈடுபடுவது, மற்றும் நான் அரசியலில் நுழைவதற்கு முன்பே என் வாழ்வின் ஒரு பகுதியாக இருந்த சமூகப் பணியைத் தொடர்வது என்று அவர் ஒரு அறிக்கையில் கூறினார்.
ஸ்கூடாய் சட்டமன்ற உறுப்பினராக இருந்த காலம் முழுவதும் தன் மீது நம்பிக்கை வைத்து ஆதரவளித்த அனைவருக்கும் மெரினா தனது நன்றியைத் தெரிவித்தார். கடந்த ஜோகூர் மாநிலத் தேர்தலில் தனக்கு ஆதரவளித்த வாக்காளர்களுக்கும், “பல்வேறு சவால்களின்” போது தனக்குத் துணையாக நின்ற தனது குழு உறுப்பினர்களுக்கும் அவர் நன்றி தெரிவித்தார். கடந்த தேர்தலில், மெரினா 26,359 வாக்குகளைப் பெற்று, 12,416 வாக்குகளைப் பெற்ற பாரிசான் நேஷனலின் லிம் சூன் ஹாய் மற்றும் 6,258 வாக்குகளைப் பெற்ற பெரிகாத்தான் நேஷனலின் கூ கெங் எக் ஆகியோரைத் தோற்கடித்தார்.





















