16ஆவது ஜோகூர் மாநிலத் தேர்தல் தொடர்பான சிறப்புக் கூட்டம் ஜூன் 12 அன்று நடைபெறும் என தேர்தல் ஆணையம் (EC) தெரிவித்துள்ளது. 1895 ஆம் ஆண்டு ஜோகூர் அரசியலமைப்பின் இரண்டாம் பகுதியின் 23(2) பிரிவின்படி, ஜூன் 2 அன்று ஜோகூர் மாநில சட்டமன்றம் கலைக்கப்படுவது குறித்து, ஜோகூர் மாநில சட்டமன்ற சபாநாயகர் டத்தோ டாக்டர் முகமது புவாட் சர்காஷியிடமிருந்து ஆணையத்திற்கு ஒரு அறிவிப்பு வந்துள்ளதாக தேர்தல் ஆணைய செயலாளர் டத்தோ கைருல் ஷாரில் இத்ருஸ் கூறினார்.
1895 ஆம் ஆண்டு ஜோகூர் அரசியலமைப்பின் இரண்டாம் பகுதியின் 23(4) பிரிவின்படி, மாநில சட்டமன்றம் கலைக்கப்பட்ட நாளிலிருந்து 60 நாட்களுக்குள் தேர்தல் நடத்தப்பட வேண்டும். தேர்தல் ஆணையத் தலைவர் டத்தோ ஸ்ரீ ரம்லான் ஹருன் தலைமையில் நடைபெறும் இந்தச் சிறப்புக் கூட்டத்தில், 16ஆவது ஜோகூர் மாநிலத் தேர்தலுக்கான தேர்தல் ஆணை, வேட்புமனுத் தாக்கல் நாள், வாக்குப்பதிவு நாள், பயன்படுத்தப்பட வேண்டிய வாக்காளர் பட்டியல் மற்றும் தேர்தலுக்கான பிற ஏற்பாடுகள் உள்ளிட்ட முக்கிய தேதிகள் குறித்து விவாதிக்கப்படும் ன்று அவர் வெள்ளிக்கிழமை (ஜூன் 5) அன்று வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்தார். சிறப்புக் கூட்டம் முடிந்தவுடன் உடனடியாக ஒரு செய்தியாளர் சந்திப்பு நடைபெறும் என்றும் அவர் மேலும் கூறினார்.




















