கூலாய் –
சூரிய உதயம் மலேசியா கல்வி உதவி நிதி விருந்து நிகழ்ச்சியில் 30 வசதி குறைந்த பல்கலைக்கழக மாணவர்களுக்கு தலா 1,000 வெள்ளி வழங்கப்பட்டது.
இந்த நிகழ்ச்சி சனிக்கிழமை டிசம்பர் 14ஆம் தேதி கூலாயில் உள்ள 88 உணவகத்தில் நடைபெற்றது.
சமூக சேவைகளை திறம்பட செய்து வரும் ஓர் இயக்கம் சூரிய உதயம் மலேசியா என ஜோகூர் மாநில ம.
இ.கா துணைத் தலைவர் எஸ்.சுப்பையா தமது உரையில் பாராட்டினார். செனாயில் தமிழ்ப் பள்ளிக்கு நிலம் கிடைத்ததாகவும் ஆனால் இன்று அது பறிக்கப்படும் நிலையில் உள்ளதாகவும் சுப்பையா மேடையில் தெரிவித்தார். அந்த நிலம் தமிழ்ப்பள்ளிக்குக் கிடைக்கும் வரை ஓயப் போவதில்லை என்று அவர் சூளுரைத்தார்.
சூரிய உதயம் மலேசியா கழகத்தின் தலைவர் எஸ். குமணன், கல்வி, மருத்துவ சிகிச்சை, சமூக நலப் பிரச்சினைகள், இந்தியர்களுக்கான வேலை வாய்ப்பு என சமூக சிந்தனை கொண்ட கழகமாக சூரிய உதயம் மலேசியா திகழ்கிறது என்றார்.
எங்கள் கழகத்திற்கு சுப்பையா, கூலாய் நாடாளுமன்ற உறுப்பினர் தியோ நி சிங் ஆகியோர் நிறைய ஒத்துழைப்பும் உதவியும் வழங்க மறப்பதில்லை என்றார்.
கல்வி துணை அமைச்சர் தியோ நி சிங்கை பிரதிநிதித்து அவரின் சிறப்பு அதிகாரி சித்ரா ராமசாமி, படித்து முடித்த பட்டதாரிகள் தங்களுடைய திறமையும் அனுபவத்தை மென்மேலும் வளர்த்துக்கொள்ள வேண்டும் என்று அறிவுரை கூறினார். இறுதியில் சாதனை தாய் விருது திருமதி இராமாயி பெற்றார். கணவர் நோய்வாய்ப்பட்டதால் அவரால் வேலை செய்ய முடியவில்லை. குறைந்த வருமானத்தில் நோய்வாய்ப்பட்ட கணவரையும் பார்த்துக்கொண்டு இரண்டு பிள்ளைகளையும் பல்கலைக்கழகம் வரை படிக்க வைத்தார் இராமாயி. அவருடைய அர்ப்பணிப்புக்காக இவ்விருது வழங்கப்பட்டது.
ஆடல், பாடல் மற்றும் விருந்து உபசரிப்புடன் நிகழ்ச்சி இரவு 11 மணிக்கு முடிவடைந்தது. இந்நிகழ்ச்சி மிகவும் அருமையாக இருந்தது என வருகை புரிந்தோர் பாராட்டிப் பேசினர். இந்நிகழ்ச்சியில் சுமார் ஆயிரம் பேர் கலந்து கொண்டனர்.