லெய்செஸ்டர் அதிரடி தொடர்கிறது மென்செஸ்டரை சாய்த்தது அர்செனல்

லண்டன் –

புத்தாண்டில் இங்கிலீஷ் பிரிமியர் லீக் கிண்ணப் போட்டியை உற்சாகத்துடன் தொடங்கியிருக்கும் அர்செனல் நேற்று 2-0 என்ற கோல்கணக்கில் மென்செஸ்டர் யுனைடெட்டை வீழ்த்தியது.

அர்செனல் நிர்வாகியாக மிகெல் ஆர்டேட்டா பதவியேற்று 3ஆவது ஆட்டங்கள் இடம் பெற்றுள்ளன. இதில் 1இல் தோல்வியும் 1 டிராவும் கண்டது. நேற்று முதல் வெற்றி கிட்டியது. மென்செஸ்டருக்கு எதிரான இந்த ஆட்டத்தில் அர்செனல் மிக எளிதில் வெற்றிபெற்றது. மூன்று கோல்மன்னர்களான அபாமாயாங், லாகாஸெட்டி, நிக்கோல் பெப்பே ஆகியோருடன் கேப்டன் ஓசிலும் ஒரே நேரத்தில் களம் இறங்கினர்.

இந்தக் கூட்டணி சூப்பரான ஆட்டத்தை வெளிப்படுத்தியது. இதன்வழி 8ஆவது நிமிடத்தில் முதல் கோலை பெப்பே அடித்தார். பின்னர் 43ஆவது நிமிடத்தில் 2ஆவது கோலை சோக்ரிட்டிஸ் போட்டார்.

மென்செஸ்டருக்கு எதிரான அர்செனல் ஆட்டம் சூப்பர் என்று வர்ணித்த நிர்வாகி மிகெல் ஆர்டேட்டா, இனி வரும் ஆட்டங்களிலும் வெற்றி தொடரும் என்று நம்பிக்கை தெரிவித்தார். இந்த வெற்றியால் அர்செனல் 27 புள்ளிகளுடன் 10ஆவது இடத்திற்கு முன்னேறியது. மென்செஸ்டர் 31 புள்ளிகளுடன் 5ஆவது இடத்தில் இருக்கிறது.

பின்னர் நடந்த 2ஆவது ஆட்டத்தில் சொந்த அரங்கில் விளையாடிய நியூகாங்ல் 0-3 என்ற கோல்கணக்கில் லெய்செஸ்டர் சிட்டியிடம் படுதோல்வி கண்டது. இந்த வெற்றியால் லெய்செஸ்டர் சிட்டி 45 புள்ளிகளுடன் 2ஆவது இடத்தில் உள்ளது.

3ஆவது ஆட்டத்தில் மென்செஸ்டர் சிட்டி 2-1 என்ற கோல்கணக்கில் எவர்ட்டனை வீழ்த்தியது. சிட்டிக்கு இது 14ஆவது வெற்றியாகும். மேலும், 44 புள்ளிகளுடன் 3ஆவது இடத்தில் இருக்கிறது.

இதனிடையே, டோட்டன் ஹாமை எதிர்த்து விளையாடிய சவூத்ஹம்டன் 1-0 என்ற கோல்கணக்கில் வெற்றிபெற்றது. டோட்டன்ஹாமுக்கு இந்த தோல்வி கடுமையான அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதனால் 30 புள்ளிகளுடன் 6ஆவது இடத்திற்கு பின்தள்ளப்பட்டிருக்கிறது. பிரைட்டன் கிளப்பை எதிர்த்து விளையாடிய செல்சியும் 1-1இல் டிரா கண்டு ஏமாந்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here