கோலாலம்பூர், மார்ச் 24-
கோவிட் -19 வைரஸ் தொற்று நோயை எதிர்கொள்ள உதவும் வகையில் பெட்ரோனாஸ் (PETRONAS) குழுமம் 2 கோடி வெள்ளி மதிப்பிலான மருத்துவ சாதனங்களை நன்கொடையாக வழங்கியுள்ளது.
இந்த உதவியை அந்நிறுவனம் தமது யயாசான் பெட்ரோனாஸ் (YAYASAN PETRONAS) எனப்படும் அறவாரியத்தின் மூலம் வழங்குகின்றது. மலேசிய சுகாதார அமைச்சு மற்றும் தேசிய பேரிடர் நிர்வாக நிறுவனம் (NADMA) ஆகியவற்றோடு இணைந்து இந்த மருத்துவ சாதனங்கள் அனைத்தும் கட்டங்கட்டமாக வழங்கப்படும்.
குறிப்பாக இச்சூழ்நிலையில் முக்கியமாக தேவைப்படும் மருத்துவ படுக்கைகள், தலையணைகள், சுய பாதுகாப்பு சாதனங்கள் வென்டிலேட்டர்கள், முகக்கவசங்கள், டிஜிட்டல் தெர்மோமீட்டர்கள் சுய புதுகாப்பு சாதனங்கள் போன்ற மருத்துவ சாதனங்கள், சுகாதார அமைச்சு, தேசிய பேரிடர் நிர்வாக அமைப்பின் அங்கீகாரத்தோடு மருத்துவமனை களுக்குத் தருவிக்கப்படும்.
இது குறித்து யயாசான் பெட்ரோனாஸ் அறவாரியத்தின் தலைமை செயல் அதிகாரி லீதா ஓஸ்மான் கூறுகையில், இந்த வைரஸ் தொற்று நோயை எதிர்கொள்ள பாடுபடும் அனைவரும் போற்றுதலுக்கு உரியவர்கள் எனக் குறிப்பிட்டார்.
இச்சூழ்நிலையில் இந்த நோயை எதிர்கொள்ள பல அமைப்புகள் தங்களால் இயன்ற உதவிகளை தொடர்ந்து வழங்கி வருகின்றனர். அவ்வகையில் பெட்ரோனாஸ் குழும இயன்ற உதவிகளை அரசாங்க இலாகாக்களோடு இணைந்து வழங்குகின்றது.
இந்த மருத்துவ பொருட்கள் தவிர்த்து பெட்ரோனாஸ் குழுமத்தின் இணை நிறுவனமான “Petronas Dagangan Berhad” குழுமமும் சுங்கை பூலோ மருத்துவமனையில் உள்ள கோவிட் – 19 பரிசோதனை மையங்களில் பணிபுரியும் மருத்துவ அதிகாரிகளுக்கு உணவு (ரொட்டி – குடிநீர்) வழங்கியது.
இதனைத் தொடர்ந்து இன்னும் பல பரிசோதனை மையங்களில் இந்த உதவி நீடிக்கப்படும் என்றும் லீதா தெரிவித்தார்.