கோலாலம்பூர், மாரச் 26-
இது சோதனையான காலம், மலேசிய மக்கள் இக்கட்டான காலக்கட்டத்தில் இருக்கின்றார்கள். இவர்கள் வெளிநடமாட்டங்களைத் தவிர்க்கவேண்டும் என்று அரசாங்கம் ஆணை பிறப்பித்திருக்கிறது.
இதனால் மக்கள் வீட்டோடு முடங்கி இருக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டிருக்கிறது.
வேலையில் இருக்கும்போது வீட்டுச் செலவினங்கள் அதிகம் இருக்காது. வீட்டில் முடக்கப்பட்டிருக்கும் குடும்பங்களின் செலவினங்கள் அதிகரித்திருப்பதாக பல குடும்பத்தலைவர்கள் கூறுகின்றனர்.
வீட்டின் உணவுச் செலவுகளை எப்படிப் பார்த்தாலும் கட்டுப்படுத்தவே முடியாது என்றாகிவருகிறது. இதற்கு பொருட்களின் அபார விலையும் தட்டுப்பாடும் வசதியுள்ளவர்கள் வாரிக்கட்டிக்கொண்டு போவதுமே காரணம்.
பொருட்களின் விலையேற்றத்தால் குடும்பச் செலவினங்கள் அதிகரிப்பு தவிர்க்கமுடியாததாகிவிட்டது.
இதில், வருமானம் என்பது அறவே இல்லை. இனி, வருமானம் என்பது இருக்குமா என்பதுதான் வருத்தமான செய்தி. குடும்பத்தலைவராக இருக்கின்றவர்கள் மட்டுமே வீட்டுக்குத்தேவையான பொருட்கள் வாங்கப் போகலாம் என்றாகிவிட்டதால் குடும்பத் தலைவர்களுக்குக் காய்ச்சல் இல்லாமல் போகாது.
இல்லாவிட்டாலும் பணப்பையில் காய்ச்சல் கண்டிப்பாக இருக்கும். அதன் அளவு 45 பாகைக்கும்
கூடுதலாகவே காட்டப்படும்.
இதில், ஆஸ்ட்ரோ கட்டணத்தைக் கட்டாவிட்டால் அங்கும் கொரோனா 19 பாய்ந்துவிடும் என்பது அனுபவம். அதில் ஆஸ்ட்ரோ மிகுந்த கவனத்துடன் செயல்படுகிறது.
இக்கட்டான இந்நேரதில் மூன்று மாதத்திற்காவது கட்டணமில்லாமல் ஆஸ்ட்ரோவில் அனைத்து சேனல்களும் காட்டப்படவேண்டும் என்று வீட்டில் முடங்கிக்கிடப்பவர்கள் கூறுகின்றனர்.
பல சீரியல்கள் இப்போது தோசைபோல் திருப்பிப் போடப்படுகின்றன.அதையும் பொறுத்துக்கொள்கின்றனர். பழையவற்றைத் திரும்பத் திரும்பப் பார்ப்பதற்குக் கட்டணம் எதற்கு என்றும் மக்கள் கேட்கின்றனர்.
மக்கள் இன்னலில் இருக்கும் நேரத்தில் சன்னலைத் திறவுங்கள் காற்றாவது வரட்டும்.