கோவிட் 19 நோய் தொற்றுக் காலக்கட்டத்தில் பேரிடி விழுந்த துறைகளில் முடி திருத்தும் கடைகளும் ஒன்றாகும். வருமானம் இல்லாமல் கடைகளை மூடும் அளவிற்கு இழப்பு ஏற்பட்டிருந்தது.
இதனிடையே, ஜூன் 10ஆம் தேதி தொடங்கி முடி திருத்தும் கடைகளை திறக்க அரசாங்கம் அனுமதி வழங்குவதாக தற்காப்பு துறை அமைச்சர் டத்தோஸ்ரீ இஸ்மாயில் சபரி யாக்கோப் தெரிவித்தார்.
மலேசிய சுகாதார துறையுடனான சிறப்பு சந்திப்பில், உள்நாட்டு வர்த்தக, வாணிப, பயனீட்டாளர் விவகார அமைச்சு முன்மொழிந்த இம்முடிவு ஏற்றுக் கொள்ளப் பட்டதாக அவர் கூறினார்.
முடி திருத்தும் கடைகள், முக ஒப்பனை, நகம் வெட்டுதல் போன்ற அனைத்து துறைகளுக்கும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. வீட்டிற்குச் சென்று முடி வெட்டும் நடைமுறையையும் ஜூலை 10 தொடங்கி மேற்கொள்ளலாம். 60 வயதிற்கு மேலானவர்களுக்கு முடி வெட்ட கடைக்காரர்கள் தனி நேரம் ஒதுக்க வேண்டும் என்று அவர் கேட்டுக் கொண்டார்.
மற்ற படி விதிக்கப்பட்ட எஸ்ஒபியை அனைவரும் கட்டாயம் பின்பற்ற வேண்டும் என்று அவர் வலியுறுத்தினார்.
முடி திருத்தும் துறைகளை சார்ந்த தொழில்துறைகளின் மூலம் 13.5 பில்லியன் ரிங்கிட் நாட்டின் பொருளாதரத்திற்கு கிடைப்பதாக அவர் கூறினார். மொத்தம் 74,000 பேர் இத்தொழில் துறைகளில் ஈடுப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.