கார்த்திகை விரதமிருந்து உமாதேவி சிவபெருமானின் இடபாகத்தை பெற்றதும், திருமால் துளசியை மணந்து தன் திருமார்பில் அணிந்து கொண்டதும் கார்த்திகை மாதத்தில் தான். கார்த்திகையன்று தீபமேற்றி நெல், பொரி, அப்பம், பொரி உருண்டை ஆகியவற்றை நிவேதனம் செய்கிறோம். “கார்த்திகை விளக்கிட்டனன்” என்று மலையில் தீபம் ஏற்றுவதை சீவக சிந்தாமணி குறிப்பிடுகிறது.
“அன்பே தகழியா ஆர்வமே நெய்யாக இன்புருகு சிந்தை இடுதிரியா – என்புருகி ஞானச்சுடர் விளக்கு ஏற்றனேன் நாரணர்க்கு ஞானத் தமிழ் புரிந்த நான்” என்று சொல்லி கார்த்திகை மாதத்தில் தினமும் மாலையில் விளக்கேற்றி வழிபட வேண்டும்.
ஆணவம், சுயநலம், மயக்கம், ஆசை போன்ற மாசுகளை, “விவேகம்” என்னும் தீயில் பொசுக்கி, மெய்ஞானம் பெற்று, அண்டம் அனைத்தையும் ஒளிர்விக்கும் பரஞ்ஜோதியை தரிசனம் செய்வதே கார்த்திகை தீபவிழாவின் அடிப்படை நோக்கம்.