சொக்சோ வாரியக் குழுத் தலைவராக பேராசிரியர் டான்ஸ்ரீ டாக்டர் ஹாஜி முகமட் ஹனிபா பின் ஹாஜி அப்துல்லா நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
இப்பதவியோடு அவர் தொழிலாளர் காப்புறுதி செயற்குழுத் தலைவர் (முதலீட்டுக் குழுமம்) மற்றும் சுய வேலை பாதுகாப்பு செயற்குழுத் தலைவர் பதவிகளையும் ஏற்பார்.
இவர் மாஸா பல்கலைக்கழகத்தின் வேந்தர் மற்றும் மாஸா குழுமத்தின் செயல் தலைவராவார். இவரோடு இன்னும் பலர் வாரிய உறுப்பினர்களாக நியமனம் செய்யப்பட்டுள்ளனர். இந்தப் பதவி நியமன நிகழ்ச்சி தலைநகரில் உள்ள விஸ்மா பெர்கெசோவில் நேற்று நடைபெற்றது.
இந்நிகழ்ச்சியில் மனிதவள அமைச்சர் டத்தோஸ்ரீ எம். சரவணன், சொக்சோ தலைமைச் செயல் அதிகாரி டத்தோஸ்ரீ முகமட் அஸ்மான் அஸிஸ் முகமட் ஆகியோர் கலந்து கொண்டனர்.
இதனிடையே பெர்கெசோவின் வாரியக் குழுவின் மறுவாழ்வு மைய வாரியக் குழு உறுப்பினராக (மறுவாழ்வுத் துறையில் அனுபவம் கொண்ட வெளிநபர்) மாற்றுத் திறனாளி பத்மாவதி கிருஷ்ணன் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
மேலும் மனிதவளப் பாதுகாப்புத் துறையில் அனுபவம் கொண்ட வாரியக் குழு உறுப்பினராக டாக்டர் அருள்ராஜ் ராஜு, டாக்டர் தனலெட்சீமி பழனிச்சாமி ஆகியோர் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.
வேலை காப்புறுதித் துறையில் அனுபவம் கொண்ட விஜயமோகன் கருப்பையாவும் வாரிய உறுப்பினராக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
பதவி நியமனம் செய்யப்பட்டவர்களுக்கு அமைச்சர் சரவணன் நியமனக் கடிதம் வழங்கினார். இவர்களின் பதவிக்காலம் ஆகஸ்டு 1ஆம் தேதி தொடங்கி அடுத்தாண்டு ஜூலை 31ஆம் தேதி வரை அமலில் இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.