கொரோனாவால் திரையுலகம் முடங்கி உள்ளது. தயாரிப்பாளர்கள் நஷ்டத்துக்கு உள்ளாகி இருக்கிறார்கள். இந்த இழப்பை ஈடுகட்ட நடிகர் நடிகைகள் சம்பளத்தை குறைக்க வேண்டும் என்ற கோரிக்கைகள் எழுந்துள்ளன. நடிகர் விஜய் ஆண்டனி, தான் நடித்து வரும் தமிழரசன், அக்னி சிறகுகள், காக்கி ஆகிய 3 படங்களின் சம்பளத்தில் 25 சதவீதம் குறைத்துக்கொள்வதாக ஏற்கனவே அறிவித்தார்.
ஹரிஷ் கல்யாண், “அடுத்து நான் நடிக்க உள்ள படங்களில் எனது வருமானத்தில் ஒரு பகுதியை விட்டுத்தருவேன்” என்று கூறினார். நடிகர் நாசர் கபடதாரி படத்தில் 15 சதவீதம் சம்பளத்தை குறைத்துள்ளார். நடிகர்கள் உதயா, அருள்தாஸ், மகத், நடிகை ஆர்த்தி, ஆகியோரும் சம்பளத்தை குறைத்துள்ளனர்.
இந்த நிலையில் தமிழில் தீரன் அதிகாரம் ஒன்று, என்.ஜி.கே, தேவ் ஆகிய படங்களில் நடித்துள்ள ரகுல்பிரீத் சிங் தயாரிப்பாளர்களுக்கு உதவும் வகையில் சம்பளத்தை பாதியாக குறைக்க தயாராகி உள்ளார். ரகுல்பிரீத் சிங் ஒரு படத்தில் நடிக்க ரூ.1.5 கோடி வாங்கி வந்ததாகவும் இனிமேல் ரூ.75 லட்சத்துக்கு நடிக்க முன்வந்து இருப்பதாகவும் தகவல் வெளியாகி உள்ளது. ரகுல் பிரீத் சிங் தற்போது கமல்ஹாசனின் இந்தியன்2, சிவகார்த்திகேயனுடன் அயலான் ஆகிய படங்களில் நடித்து வருகிறார்.
























