தமிழில் ஜெயம்ரவி ஜோடியாக தாம்தூம் படத்தில் நடித்துள்ள கங்கனா ரணாவத் இந்தியில் ரூ.12 கோடிக்கு மேல் சம்பளம் வாங்கும் முன்னணி கதாநாயகியாக இருக்கிறார். இளம் நடிகர் சுஷாந்த் சிங் தற்கொலைக்கு பிறகு சினிமாவில் வாரிசு நடிகர்கள் ஆதிக்கத்துக்கு எதிராக குரல் கொடுத்து வருகிறார்.
இந்த நிலையில் பிரதமர் நரேந்திரமோடி திறமையாக செயல்பட்டு வருவதாக சமூக வலைத்தளத்தில் பாராட்டி கருத்து பதிவிட்டு இருந்தார். இதற்கு விமர்சனங்கள் கிளம்பின. பா.ஜனதா கட்சியில் சேர அவர் முடிவு செய்து விட்டதாகவும் பேசினர்.
இதற்கு பதில் அளித்துள்ள கங்கனா ரணாவத், ‘எனக்கு பா.ஜனதா கட்சி எம்.பி தேர்தலில் போட்டியிட சீட் கொடுக்க முன்வந்தது. நான் ஏற்கவில்லை. எனது தாத்தா காங்கிரஸ் கட்சியில் 15 வருடங்கள் எம்.எல்.ஏவாக இருந்து இருக்கிறார். பா.ஜனதா கட்சியில் சேரப்போகிறேன் என்று பலரும் கூறுகின்றனர். எனக்கு அரசியலில் விருப்பம் இல்லை. அதுபற்றி சிந்திக்கவும் இல்லை. நடிப்பின் மீதுதான் ஆர்வம். ஆனாலும் எனது கருத்துக்களை சுதந்திரமாக வெளியிடுவேன். அதை நிறுத்த மாட்டேன்” என்று கூறியுள்ளார்.