காவிரி நீர் முறைப்படுத்தும் குழு கூட்டம் அக். 9ல் டில்லியில் நடக்கிறது.தமிழகத்திற்கு ஆண்டுதோறும் 177.25 டி.எம்.சி. காவிரி நீரை கர்நாடக அரசு வழங்க வேண்டும். இந்த நீர் கிடைப்பதை உறுதி செய்வதற்கு காவிரி மேலாண்மை ஆணையம் மற்றும் காவிரி நீர் முறைப்படுத்தும் குழுக்கள் அமைக்கப்பட்டு உள்ளன.
காவிரி நீர் முறைப்படுத்தும் குழுவினர் மாதம் தோறும் ஆலோசனை நடத்தி வருகின்றனர். கொரோனா பாதிப்பு காரணமாக ‘வீடியோ கான்பரன்ஸ்’ வாயிலாக இக்கூட்டம் நடந்து வருகிறது.செப்டம்பரில் நடந்த கூட்டத்தில் தமிழகத்திற்கு உபரிநீரை திறந்து கர்நாடகா கணக்கு காட்டியுள்ளதாக தமிழக அதிகாரிகள் தரப்பில் குற்றம் சாட்டப்பட்டது.
நடப்பு ஆண்டுக்கான ஒதுக்கீட்டில் 2.44 டி.எம்.சி. நீரை கர்நாடக அரசு நிலுவை வைத்துள்ளது. இம்மாதம் 20.2 டி.எம்.சி. நீர் வழங்க வேண்டும். காவிரி நீர் முறைப்படுத்தும் குழு கூட்டம் அக். 9ம் தேதி டில்லியில் நடக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.இக்கூட்டத்தில் காணொலி வாயிலாக பங்கேற்க தமிழக அதிகாரிகள் முடிவெடுத்துள்ளனர். சம்பா சாகுபடி பருவம் துவங்கியுள்ளதால் முறைப்படி நீர் திறக்க கர்நாடக அரசிற்கு உத்தரவிடும்படி இக்கூட்டத்தில் வலியுறுத்தப்பட உள்ளது.