முடங்களின் முடங்கல்

 

முடங்களின் முடங்கல்!

முகத்தைத் திருப்பி முதுகில் வைத்தால்,

முண்டம் என்பார்கள் !- அந்த,

முகத்தில் கண்கள் இல்லை என்றால்.

முடமெனச்   சொல்வார்கள்!

 

எதுகை மோனை இணையா விட்டால்,

எவர்தான் மதிப்பார்கள்?- சொலல், 

புதுமை ஆயினும் புரியா விட்டால்

பொய்மை என்பார்கள்!

 

பொய்மை என்பதும் கவிதைக் கழகு, 

புரிந்தே  உணர்ந்தாலே!- இதில், 

பொய்-மெய்  என்பதன் அர்த்தம் வேறு,

புரியா திருந்தாலே!

 

எழுத்தசை சீர்தளை  அடிதொடை ஆறும்

அழகிய இலக்கணங்கள்- குறளடி,

விழுமிய  வரிகளுள்  விழுந்தவை யாவும்

வியத்தகு மரபினங்கள்!

 

மரபே இன்றி மந்திரத் தாலே 

மாங்காய்  விழுவதில்லை!- அந்த

மரபே இன்றி  மண்ணில் கூட

மந்திரம் வென்றதில்லை!

 

தந்திரம் காட்டித் தர்மம் என்றால்,

தரித்திரம் என்பார்கள்!- புது

எந்திரம் ஆயினும்  இயங்கிட வேண்டும்

எப்படி வென்றார்கள்?

 

பொம்மைகள் செய்தே பொதுவினில் வைத்தால்,

பொய்வாய் மழலைக்கும்- அதன்,

உண்மைகள்  தெரிய பக்குவம் போதா

உணர்வால் பல்லிளிக்கும்! 

 

இளிப்பைக் காட்டி இலக்கணம் செய்யும் 

இயலா வித்தகரீர்!- புது,

இளிப்பில்  கூட  இலக்கணம்  இன்றேல்

இலட்சியம் தவறாகும்!

வீர. கா. அருண்மொழித்தேவன் 

 

 

 

 

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here