கோம்பாக்:தாமான் செலயாங் பாருவில் கைது செய்யப்பட்ட பாதுகாவலர் (security guard) ஒருவர் கோம்பாக் காவல் தலைமையகத்தில் மரணம் அடைந்துள்ளார்.
43 வயதான அந்நபர் நேற்று (மே 20) கோம்பாக் போலீஸ் தலைமையகத்திற்கு அழைத்து வரப்பட்ட பின்னர் மூச்சு விடுவதில் சிரமத்தை சந்தித்ததாக கோம்பாக் ஓ.சி.பி.டி உதவி ஆணையர் ஆரிஃபாய் தாராவே தெரிவித்தார்.
ஒரு குற்றவியல் மிரட்டல் வழக்கில் தேடப்பட்டு வந்த அந்நபரை நாங்கள் காலை 11.20 மணியளவில் சந்தேக நபரை கைது செய்தோம். இருப்பினும், அவர் காலை 11.40 மணிக்கு சுவாசிக்க முடியாமல் சிரமப்பட்டதை தொடர்ந்து அவசர உதவிக்காக செலாயாங் மருத்துவமனைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது என்றார்.
செலயாங்கிலிருந்து மருத்துவ பணியாளர்கள் கோம்பாக் போலீஸ் தலைமையகத்திற்கு வந்து சந்தேக நபருக்கு அவசர சிகிச்சை அளித்ததாக ஏ.சி.பி ஆரிஃபாய் தெரிவித்தார்.
இருப்பினும், சந்தேக நபர் மதியம் 12.30 மணியளவில் இறந்துவிட்டதாக அறிவிக்கப்பட்டார். ஆரம்ப விசாரணையில் சந்தேக நபருக்கு இதய பிரச்சினைகள் இருந்ததாக தெரியவந்துள்ளது.
இந்த வழக்கு திடீர் மரணம் என வகைப்படுத்தப்பட்டுள்ளது மற்றும் உடல் கோலாலம்பூர் மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டுள்ளது என்று அவர் மேலும் கூறினார்.