பெட்டாலிங் ஜெயா: நிலையான இயக்க நடைமுறைகளை பின்பற்றாததால் (எஸ்ஓபி) ஆர்-நாட் (R 0) என அழைக்கப்படும் தொற்று விகிதம் விரைவாக அதிகரித்து வருகின்றது. இவ்வாறு அதிகரிக்குமானால் தொற்று விகிதம் 1.2 க்கு மேல் இருந்தால், ஜூன் நடுப்பகுதியில் தினசரி கோவிட் -19 தொற்றின் எண்ணிக்கை 13,000 ஆக உயர கூடும் என்று சுகாதார தலைமை இயக்குநர் டான் ஸ்ரீ டாக்டர் நூர் ஹிஷாம் அப்துல்லா தனது சமூக ஊடக கணக்குகளில் பகிர்ந்து கொண்டார்.
நேற்று (மே 28) நேற்று நாடு தழுவிய தொற்று விகிதம் 1.15 ஆக இருந்தது என்றும் இது மாநிலத்திற்கு மாநிலம் வேறுபட்டிருந்ததுடன்அதிகபட்சமான தொற்று விகிதத்தை மலாக்கா (1.32 ), அதற்கு அடுத்தபடியாக சபா (1.31), நெகிரி செம்பிலான் (1.30), புத்ராஜெயா (1.24), கெடா மற்றும் பஹாங் (1.21), கிளந்தான் (1.18) என்ற விகிதத்தில் நோய்த்தொற்று பதிவுசெய்யப்பட்டிருந்தது.
புதிய தினசரி தொற்றுக்களின் எண்ணிக்கை தொடர்ந்து ஐந்து நாட்களாக அதிகரித்து வருவதன் விளைவாகவே, ஜூன் 1-14 முதல் நாடு மொத்தமாக நடமாட்டக்கட்டுப்பாடு பிறப்பிக்கப்பட்டுள்ளது என்றும் இதன் விளைவாக நோய்த்தொற்று சங்கிலி உடைத்து நோய்த்தொற்று விகிதத்தை (R0) 0.5 ஆக குறைய வழிவகுக்கும் என்று டாக்டர் நூர் ஹிஷாம் கூறினார்.
சனிக்கிழமை (மே 29) இன்றைய நிலவரப்படி நாட்டின் மொத்த உறுதிப்படுத்தப்பட்ட வழக்குகளின் எண்ணிக்கை 558,534 ஆகவும், இந்த நோயால் இறந்தவர்களின் எண்ணிக்கை 2,650 ஆகவும் உள்ளது.