கோவிட்-19 பரவலைத் தடுக்க தீவிரம்
தயாரிப்புத் தொழில்துறையில் கோவிட்-19 பரவலைக் கட்டுப்படுத்துவதில் கோவிட்-19 தடுப்பூசித் திட்டத்திற்கான பொது தனியார் பங்காளித்துவம் (பிக்காஸ்) உதவ முடியும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இது தேசிய மீட்சித்திட்டத்தின் அமலாக்கத்திற்கும் உதவி வருகிறது. வேலை இடங்களில் கொரோனா வைரஸ் பரவுவதால் மிகவும் மோசமாகப் பாதிக்கப்பட்டிருக்கும் தயாரிப்புத் துறைக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட வேண்டும் என்று சுகாதார அமைச்சின் அறிக்கை கூறியிருப்பதாகப் பிரதமர் முஹிடின் யாசின் தெரிவித்துள்ளார்.
கடந்த சில மாதங்களாகத் தொழிற்சாலைகளிலும் தொழிலாளர் குடியிருப்புகளிலும் அதிகமான புதிய தொற்று ஏற்பட்டிருப்பதால் நம் நாட்டில் தொற்றுப் பரவலைக் குறைப்பதற்கு கோவிட்-19 தடுப்பூசி விநியோக உத்தரவாதம் மீதான சிறப்புக் குழு எடுத்துள்ள நடவடிக்கைகளில் பிக்காஸும் அடங்கும் என்று பிரதமர் குறிப்பிட்டார்.
1990ஆம் ஆண்டு தொழிலாளர்களுக்கான குறைந்தபட்ச வீடமைப்பு அடிப்படை வசதி சட்டத்தை ஏராளமான முதலாளிகள் கடைப்பிடிக்கத் தவறியிருப்பதால் இந்த நடவடிக்கை எடுக்கப்படுகிறது என்றும் பிரதமர் சொன்னார்.
தலைநகர் கோலாலம்பூரிலுள்ள டெக்சாஸ் இன்ஸ்ருமென்ட்ஸ் மலேசியா சென்.பெர்ஹாட்டில் தடுப்பூசி போடும் பணியை நேற்று பார்வையிட்ட பின் பிரதமர் இதனைத் தெரிவித்தார்.
அனைத்துலக வர்த்தகத் தொழில்துறை அமைச்சர் டத்தோஸ்ரீ முகமட் அஸ்மின் அலி, சுகாதார அமைச்சர் டத்தோ டாக்டர் அடாம் பாபா, தேசிய கோவிட்-19 தடுப்பூசித் திட்டத்தின் ஒருங்கிணைப்பு அமைச்சர் கைரி ஜமாலுடின் ஆகியோரும் அங்கு வந்திருந்தனர்.