மலேசிய நடிகையான சாந்தினி தேவா கொடுத்த பாலியல் புகாரையடுத்து முன்னாள் அமைச்சர் மணிகண்டன் மீது அடையாறு மகளிர் காவல் நிலையத்தில் 6 பிரிவுகளில் வழக்கு பதிவு செய்யப்பட்டது. அதனை தொடர்ந்து தலைமறைவாக இருந்த மணிகண்டனை பெங்களூருவில் கைது செய்து சென்னைக்கு கொண்டு வந்த போலீசார் சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தினர்.
நீதிமன்றம் மணிகண்டனை ஜூலை 2ஆம் தேதி வரை காவலில் வைக்க உத்தரவிட்டது. இந்நிலையில் சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் ஜாமீன் கேட்டு மணிகண்டன் மனு தாக்கல் செய்தார். அது தொடர்பான விசாரணை கடந்த செவ்வாய்க்கிழமை அன்று வந்தபோது, அடையாறு காவல் நிலையத்தில் இதுகுறித்து விளக்கம் பெற்று அறிக்கையை சமர்ப்பிக்க கால அவகாசம் தேவை என்று அரசு தரப்பில் கேட்கப்பட்டது.
இதையடுத்து, ஜாமீன் தொடர்பாக பதிலளிக்க காவல்துறைக்கு உத்தரவிட்ட நீதிமன்றம் வழக்கை ஒத்திவைத்தது. இந்நிலையில், இந்த வழக்கு இன்று மீண்டும் சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்துக்கு வந்தது. அப்போது, காவல்துறை தரப்பில் நீதிபதியிடம் அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டது. அறிக்கையை சரிபார்த்த நீதிபதி முன்னாள் அமைச்சர் மணிகண்டனின் ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்து உத்திரவிட்டார்.
நடிகை சாந்தினி தேவா கடந்த மே 28ம் தேதி சென்னை கமிஷனர் அலுவலகத்துக்கு வந்து பாலியல் புகார் கொடுத்தார். அந்த புகாரில், கடந்த 5 ஆண்டுகளாக நடிகை சாந்தினியுடன் பழகி வந்த மணிகண்டன் அவருடன் நெருக்கமாக இருந்துவிட்டு மூன்று முறை கட்டாயப்படுத்தி கருக்கலைப்பு செய்ததாகவும், தற்போது திருமணம் செய்துகொள்ள மறுப்பதுடன், தனது தனிப்பட்ட புகைப்படங்களை வெளியிடப்போவதாகவும் மணிகண்டன் மிரட்டுவதாக நடிகை கூறியிருந்தார்.