பெட்டாலிங் ஜெயா, (ஜூன் 30) :
பிறந்து ஒன்பது மாதங்களேயான ஒரு ஆண் குழந்தையை அதன் பராமரிப்பாளர் கடுமையாக சித்திரவதை செய்ததாக சந்தேகிக்கப்படுகிறது. இப்போது அந்தக் குழந்தை ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
செர்டாங் மாவட்ட காவல்துறைத் தலைவர் A.A. அன்பழகன் கூறுகையில் , “இரவு 11 மணியளவில் குழந்தை பராமரிப்பாளரான பெண் தனது பராமரிப்பில் இருந்த குழந்தைக்கு, பால் கொடுக்க முற்பட்டவேளை குழந்தை சோபாவிலிருந்து விழுந்ததாகவும் அதன் பின்னர் குழந்தை மிகவும் சிரமப்பட்டதாக சந்தேக நபர் கூறினார், இருப்பினும் பாதிக்கப்பட்ட குழந்தை மிகவும் பலவீனமாக இருந்தது, அதனைத் தொடர்ந்து குழந்தையை சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றார்,” என்று அவர் ஓர் அறிக்கையில் தெரிவித்தார்.
இருப்பினும், கடந்த புதன்கிழமை (ஜூன் 23) குழந்தைக்கு சிகிச்சையளித்த மலாயா மருத்துவ மையத்தின் (UMMC) மருத்துவர்கள் பாதிக்கப்பட்ட குழந்தையின் தலையில் ஏற்பட்ட காயங்களின் விளைவுகளின் அடிப்படையில் பார்க்கும்போது, இக்காயங்கள் சித்திரவதை செய்ததால் ஏற்பட்டுள்ளதாக சாத்தியக்கூறு இருப்பதாக கூறினர்.
அதன்படி, சந்தேக நபரை மறுநாள் (ஜூன் 23) விசாரணைக்காக கைது செய்த செர்டாங் மாவட்ட காவல் தலைமையகத்தின் (IPD) பெண்கள் மற்றும் குழந்தைகள் பாலியல் புலனாய்வு பிரிவு (D 11), குற்ற புலனாய்வுத் துறை (JSJ) அவரை தடுப்புக்காவலில் வைத்து விசாரணை மேற்கொண்டு வருகின்றது.
“தண்டனைச் சட்டத்தின் குழந்தைகள் சட்டம் 2001 இன் பிரிவு 31 (1) (a) இன் கீழ் விசாரணைக்காக சந்தேகநபர் நாளை வரை ஏழு நாட்கள் தடுப்புக்காவலில் வைக்கப்பட்டுள்ளார்” என்று அவர் கூறினார்.
சந்தேகநபர் நேற்று (ஜூன் 29) பெட்டாலிங் ஜெயா நீதிமன்ற அமர்வின் போது (4) குற்றம் சாட்டப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.