வீடியோ வைரலால் குவியும் உதவி !
உலகம் முழுவதும் மக்கள் கொரோனா எனும் பெரும் தொற்று பாதிப்பில் சிக்கி தவித்து வருகின்றனர். கொரோனா தடுக்க தடுப்பூசி பயன்பாட்டுக்கு வந்த போதிலும் முழுமையாக அனைவருக்கும் கொரோனா தடுப்பூசி செலுத்தவில்லை.
இதனால் அடுத்து 3ஆவது அலை வருமோ என்ற அச்சம் மக்கள் மத்தியில் எழுந்துள்ளது. இதனால் வைரஸ் பாதிப்பில் இருந்து தற்காத்துக்கொள்வதற்கு தற்போது நம்மிடையே இருக்கும் ஒரே ஆயுதம் மாஸ்க் அணிவது மட்டுமே என மருத்துவ வல்லுநர்கள் கூறுகின்றனர்.
இந்தியாவில் பெரும் பாதிப்பை ஏற்படுத்திய இரண்டாவது அலை பரவல் தற்போது தான் கட்டுக்குள் வந்திருக்கிறது. இதன் காரணமாக பல்வேறு மாநிலங்களிலும் ஊரடங்கு தளர்வுகள் அறிவிக்கப்பட்டு நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளன. இதனால் பெரும்பாலான மக்கள் முகக்கவசம் இன்றி வீதிகளில் சுற்றுவதை காணமுடிகிறது.
இந்த நிலையில், ஹிமாச்சல் பிரதேச மாநிலத்தில் மக்களை மாஸ்க் அணி வலியுறுத்தும் பலூன் விற்கும் சிறுவனின் வீடியோ வைரலாகி வருகிறது. அதாவது, தர்மசாலாவின் பாக்சுனாக் எனும் சுற்றுலா தளத்தின் கடைவீதியில் 5 வயது சிறுவன் ஒருவன் கையில் தடி போன்ற பலூன் ஒன்றை வைத்துக் கொண்டு, முகக்கவசம் அணியாமல் அந்த வழியாக செல்லும் சுற்றுலா பயணிகளை முகக்கவசம் அணியுமாறு கடிந்து கொள்கிறான்.
உங்களுடைய மாஸ்க் எங்கே எனக்கேட்கும் அந்த 5 வயது சிறுவன், அதிருப்தியில் தடியால் அவர்களை லேசாக சீண்டுகிறான். இந்த சிறுவனின் வீடியோ இன்ஸ்டாக்ராமில் வைரலாகி வருகிறது. அதில், இந்த மக்களின் சிரிப்பை பாருங்கள். அந்த சிறுவனிடம் அணிய செருப்பு கூட கிடையாது. யார் இங்கே படித்தவர்கள், யார் படிக்காதவர்கள்? என அதில் கேள்வி எழுப்பப்பட்டுள்ளது. இந்த வீடியோ தற்போது வைரலாக மாறியிருக்கிறது.
இந்த வீடியோவை பார்த்த போலீஸ்காரர்கள், அச்சிறுவனுக்கு தொப்பி ஒன்றையும், ஸ்னாக்ஸ் , எனர்ஜி பானம் ஆகியவற்றை வழங்கினர். மேலும் சில நெட்டிசன்கள் சிறுவனைத் தேடி வந்து அவனுக்கும், அவனது சகோதரர்களுக்கும் செருப்புகளையும், ஆடைகளையும் வாங்கித் தந்துள்ளனர். சிறுவனின் கல்விக்காக உதவவும் தன்னார்வலர்கள் சிலர் முன்வந்துள்ளனர்.