மக்கள் ஓசை செய்தியாளர், நிபோங் தெபால், ஜூலை12 :
கட்டுப்பாட்டை இழந்த கார் சாலை ஓரம் இருந்த மரத்தில் மோதியதில் கார் ஓட்டுநர் சர்வீன் த/பெ வேல்முருகன் (வயது 21) என்ற இளைஞர் சம்பவம் நடந்த இடத்தில் பரிதாபமாக உயிரிழந்தார்
இச்சம்பவம் நேற்று முன்தினம் இரவு 10.45 மணியளவில் நிபோங் தெபாலில் இருந்து பைராம் தோட்டத்திற்குச் செல்லும் வழியில் நிகழ்ந்தது. சர்வீன் செலுத்திய கஞ்சில் ரக கார் சாலை வளைவு ஒன்றில் கட்டுப்பாட்டை இழந்து மரத்தில் மோதியதாகச் சொல்லப்படுகிறது.கடுமையான காயங்களுக்கு உள்ளான சர்வீன் சம்பவம் நடந்த இடத்திலேயே இறந்ததாகக் கூறப்பட்டது.
மரணமடைந்த சர்வீன், வேல்முருகன்-வாணிஸ்ரீ தம்பதியின் மூத்த மகனாவார். சர்வீனுக்கு ஒரு தம்பியும் ஒரு தங்கையும் உள்ளனர். இவரின் தந்தை வேல்முருகன் ம.இ.கா. விக்டோரியா கிளைத் தலைவரும் விக்டோரியா தோட்ட அருள்மிகு ஸ்ரீ திரௌபதை அம்மன் ஆலய முக்கிய பொறுப்பாளருமாவார்.
பிரேதப் பரிசோதனைக்காக பினாங்கு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கபட்டுள்ள சர்வீனின் நல்லுடல் பிரேதப் பரிசோதனைக்குப் பின்னர் இன்று திங்கட்கிழமை தாமான் நிபோங் தெபால் ஜெயாவிலுள்ள அவரது இல்லத்தில் நல்லடக்கச் சடங்குகள் நடத்தப்பட்டு விக்டோரியா இந்து இடுகாட்டில் நல்லடக்கம் செய்யப்படும் என்று அவரது தந்தை வேல்முருகன் தெரிவித்தார்.