கனமழையால் ஏற்பட்ட வெள்ளம்; மும்பை, அசாம் கடும் பாதிப்பு

மும்பை: கனமழை காரணமாக இந்தியாவின் மும்பை நகரத்தில் வெள்ளம் ஏற்பட்டது. நகரின் சாலைகளும் ரயில் தண்டவாளங்களும் வெள்ளத்தில் மூழ்கியதை அடுத்து, அங்குள்ள சில பள்ளிகளும் கல்லூரிகளும் மூடப்பட்டுள்ளன. இந்திய நேரப்படி ஜூலை 7ஆம் தேதி இரவு தொடங்கி ஜூலை 8ஆம் தேதி காலை 7 மணி வரை மும்பையில் கனமழை பெய்ததாக அந்நகரத்தின் நகராட்சி மன்றம் தெரிவித்தது.

மும்பையில் தொடர்ந்து கனமழை எதிர்பார்க்கப்படுவதாக இந்திய வானிலை மையம் முன்னுரைத்துள்ளது. எனவே, வெள்ளம் மோசமடைந்து மேலும் பல பகுதிகள் கடுமையாகப் பாதிப்படையக்கூடும் என்று அஞ்சப்படுகிறது. வெள்ளம் காரணமாக ஜூலை 8ஆம் தேதி காலை உச்சவேளை நேரத்தின்போது மும்பையில் உள்ள விரைவுச்சாலைகளில் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

அதுமட்டுமல்லாது, சில தொலைதூர ரயில் சேவைகள் ரத்து செய்யப்பட்டதாகவும் அதிகாரிகள் கூறினர். இந்நிலையில், கனமழை காரணமாக இந்தியாவின் வடகிழக்கு மாநிலமான அசாமில் உள்ள ஆறுகள் நிரம்பி வழிந்தன. இதன் காரணமாக அப்பகுதிகளில் வெள்ளம் கரைபுரண்டோடியது. இதன் விளைவாக 2 மில்லியனுக்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர். வெள்ளத்தில் மூழ்கி ஆறு காண்டாமிருகங்கள் மாண்டதாக அதிகாரிகள் ஜூலை 7ஆம் தேதியன்று தெரிவித்தனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here