ஜோகூர் பாரு: கடந்த திங்கட்கிழமை (செப்.6) அன்று ஜோகூரிலிருந்து பூரான்கள் கடத்தும் முயற்சியை மலேசிய தனிமைப்படுத்தல் மற்றும் ஆய்வு சேவைகள் துறை ( MAQIS) முறியடித்துள்ளது.
திங்கட்கிழமை பிற்பகல் 1 மணியளவில் ஸ்டுலாங் லாட் ஃபெர்ரி டெர்மினலில் இந்தோனேசியாவைச் சேர்ந்த ஒருவரை கைது செய்த பிறகு இந்தப் பூரான்கள் கைப்பற்றப்பட்டதாக அந்தத் துறை தெரிவித்துள்ளது.
“கைது செய்யப்பட்ட ஆடவரிடம் வழக்கமான சோதனையைத் தொடர்ந்து, அவர் எடுத்துச் சென்ற ஒரு பொதியின் உள்ளே சென்டிபீடஸை (பூரான்) நாங்கள் கண்டோம். அவற்றை இறக்குமதி செய்வதற்கான அனுமதி அவரிடம் இல்லை” என்று maqis ஒரு அறிக்கையில் தெரிவித்தது.
மேலும் உயிருள்ள அந்தப் பூரான்கள் சுமார் 1,750 வெள்ளி மதிப்புள்ளவை என்றும் மீன் உணவாகப் பயன்படுத்துவதற்காக அவர் கொண்டு செல்ல முற்பட்டார் என்றும் அது தெரிவித்தது.
“இந்த வழக்கு மகிஸ் சட்டம் 2011 பிரிவு 11 (1) இன் கீழ் விசாரிக்கப்படுகிறது. சந்தேக நபர் அவரது அறிக்கை எடுக்கப்பட்ட பிறகு விடுவிக்கப்பட்டார்” என்றும் மகிஸ் தெரிவித்தது.
இறக்குமதியாளர்கள் மற்றும் ஏற்றுமதியாளர்கள் அனைவரும் மலேசியாவில் விலங்கு, மீன் மற்றும் தாவர மற்றும் உணவுப் பாதுகாப்பு ஆகியவற்றைக் கட்டுப்படுத்துவதை உறுதி செய்ய அரசாங்கம் விதித்த விதிமுறைகளை எப்போதும் பின்பற்றுமாறு துறை அறிவுறுத்தியது குறிப்பிடத்தக்கது.