யானை மீது கார் மோதியதில் ஒருவர் பலி; மூன்று பேர் காயம்

குளுவாங்: நேற்று இரவு புக்கிட் தோங்காட் நோக்கி சென்று கொண்டிருந்த கார், ஜாலான் பினாங் என்ற இடத்தில் யானை மீது மோதியதில் ஒரு நபர் பலியானார் மற்றும் மூன்று பேர் காயமடைந்தனர்.

தீயணைப்பு மற்றும் மீட்பு துறையின் கமாண்டர் அப்துல் ரஹீம் ரசாலியின் கூற்றுப்படி, இவ்விபத்தில் இறந்தவர் இஸ்மாயில் தாவுத் (37) என அடையாளம் காணப்பட்டார், மற்றவர்களின் அடையாளங்கள் இன்னும் கண்டறியப்படவில்லை.

காரில் மோதிய யானை பாதுகாப்பாக இருப்பதாக சம்பவ இடத்தில் சாட்சிகள் தெரிவித்தனர் என்றார்.

“ஜோகூர் மாநில செயல்பாட்டு மையத்திற்கு இரவு 9.59 மணிக்கு சாலை விபத்து அவசர அழைப்பு வந்தது உடனே விபத்து நடந்த இடத்திற்கு ரெங்கம் தீயணைப்பு மற்றும் மீட்பு நிலையத்தில் இருந்து ஒரு தீயணைப்பு வாகனத்தில் உறுப்பினர்கள் அனுப்பி வைக்கப்பட்டனர்.

“சம்பவ இடத்திற்கு தீயணைப்பு மற்றும் மீட்புக் குழு வந்தவுடன், ஒரு ஹோண்டா சிட்டி வகை கார் சம்பந்தப்பட்ட சாலை விபத்து நடந்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. மேலும் மூன்று பாதிக்கப்பட்டவர்கள் வாகனத்தில் இருந்து பொதுமக்களால் வெளியேற்றப்பட்டிருந்தனர்.

“தீயணைப்பு மற்றும் மீட்புக் குழு அந்த இடத்திற்கு வருவதற்கு முன்பு மீட்கப்பட்டவர்கள் சுகாதார அமைச்சின் ஆம்புலன்ஸில் ஒப்படைக்கப்பட்டனர்.

“ஓட்டுநர் இருக்கையில் இருந்த ஒருவரை அகற்ற மீட்புக் குழு செயல்பட்டது, சம்பவ இடத்திலேயே அவர் இறந்தது உறுதி செய்யப்பட்டது,” என்று அவர் கூறினார்.

பாதிக்கப்பட்டவரின் உடல் அடுத்தகட்ட நடவடிக்கைகளுக்காக போலீசாரிடம் ஒப்படைக்கப்பட்டது என்றார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here