உல்லாசத்துக்கு தடையாக இருந்த தனது 2 பச்சிளம் குழந்தைகளையும் ஜன்னல் வழியே 15வது மாடியிலிருந்து வீசிக்கொன்ற தந்தை மற்றும் அவரது புது மனைவி ஆகியோருக்கு, சீன நீதிமன்றம் விஷ ஊசி மூலம் மரண தண்டனையை அரங்கேற்றியுள்ளது.
ஜாங் போ என்ற நபர் தனக்கு திருமணமாகி 2 குழந்தைகள் இருப்பதை மறைத்து செங்சென் என்ற பெண்ணுடன் உறவாடி வந்தார். கடைசியில் செங்சென்னுக்கு உண்மை தெரிந்தபோதும், கபடக் காதலன் மீதான காதலால் அவனது பொய்களை மன்னித்தாள். பிராயசித்தமாக மனைவியை விவாகரத்து செய்துவிட்டு தன்னை மணந்துகொள்ளும்படி நிபந்தனை விதித்தாள். ஜாங் போ அப்படியே செய்தான்.
ஆனால் திருமணமானதும் கணவனின் முதல் திருமண வாரிசுகளான 2 வயது மகள் மற்றும் 1 வயது மகன் ஆகியோரை செங்சென் தொந்தரவாக கருதினாள். ஒரு கட்டத்தில் மனைவியை விவாகரத்து செய்தது போல குழந்தைகளையும் தலைமுழுகினால் மட்டுமே உல்லாசத்துக்கு உடன்படுவேன் என்று அடம் பிடித்தாள். ஜாங் போ கண்களை காமம் மறைத்ததில் தனது பச்சிளம் குழந்தைகளை கொல்ல முடிவு செய்தான்.
சந்தேகம் எழாதிருக்க, தாங்கள் வசிக்கும் 15வது மாடியிலிருந்து ஜன்னல் வழியே 2 குழந்தைகளையும் பெற்ற தந்தையே வெளியே வீசி எறிந்தான். அவனது புது மனைவி அதற்கான ஒத்தாசைகளை செய்தாள். 15 மாடிகள் உயரத்திலிருந்து தரையில் விழுந்ததில், சம்பவ இடத்திலேயே குழந்தைகள் உடல் சிதறி இறந்தன. போலீஸார் விசாரணையில், ’நாங்கள் இருவரும் அறைக்குள் உறங்கும்போது, விளையாட்டு போக்கில் 2 குழந்தைகளும் ஜன்னலை திறந்து வெளியே விழுந்ததாக’ ஜாங்போ – செங்சென் ஜோடி சாதித்தது.
ஆனால் குழந்தையின் தாயும் ஜாங் போ-வின் விவாகரத்தான மனைவியுமான சென் மெய்லின், இதனை நம்பத் தயாராக இல்லை. தனது ஐயங்களை பட்டியலாக்கி போலீசாரிடம் புகாராக வழங்கினார். மேலும் சமூக ஊடகங்களிலும் இறந்த குழந்தைகளுக்கு நியாயம் கோரி பதிவிட்டார். இது பொதுசமூகத்தில் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. போலீஸார் விரைந்து விசாரித்ததில் நடந்தது படுபாதக கொலைகள் எனத் தெரிய வந்தது. இதனையடுத்து 2 பிஞ்சுகளை கொன்ற ஜாங் போ – செங்சென் தம்பதிக்கு எதிராக நாடே கொந்தளித்தது.
பொதுமக்களின் உணர்வுகளை பிரதிபலிக்கும் வகையில், குற்றவாளிகள் இருவருக்கும் மரண தண்டனை விதித்து நீதிமன்றம் தீர்ப்பளித்தது. ஆனால் குற்றவாளிகள் இருவரும் மேல்முறையீடு, கருணை மனு என இழுத்தடிக்க முயலவே, மீண்டும் சமூக ஊடகப் புரட்சி எழுந்தது. மக்களின் உணர்வுகளுக்கு மதிப்பளித்த சீன அரசாங்கம் 2 பிஞ்சுகளை துள்ளத்துடிக்க கொன்ற குற்றவாளிகள் இருவருக்கும், நேற்று விஷ ஊசி செலுத்தி மரண தண்டனையை அரங்கேற்றியது. இதனை இறந்த இரு குழந்தைகளுக்குமான நீதியாக, சீனாவின் பிரதான சமூக ஊடகமான வெய்போ நேற்று நாள் முழுக்க கொண்டாடியது.