சுங்கைப்பட்டாணி, நவம்பர் 15 :
தாமான் பெரிங்கின் இந்தாவில் உள்ள ஒரு மின்சாதனங்கள் விற்கும் கடையில் இன்று அதிகாலை 6 பேர் கொண்ட கொள்ளையர்கள் குழுவால் பல மின்சாதனங்கள் மற்றும் 24 சுருள் செப்பு கம்பிகள் கொள்ளையடிக்கப்பட்டுள்ளது. இதனால் அக்கடை உரிமையாளருக்கு 20,000 வெள்ளி இழப்பு ஏற்பட்டுள்ளது.
இன்று அதிகாலை 4 மணியளவில், இந்த சம்பவம் குறித்து போலீசாருக்கு அழைப்பு வந்ததாகவும், அதன் அடிப்படையில் கடையில் மேலும் ஆய்வு செய்ததில், கிரில் மற்றும் ஷட்டர் கதவுகள் திறக்கப்பட்டதற்கான தடயங்கள் இருப்பதைக் கண்டறிந்ததாகவும் கோலமுடா மாவட்ட காவல்துறைத் தலைமை துணை ஆணையர் அட்ஜ்லி அபு ஷா தெரிவித்தார்.
“மேலும் CCTV கேமரா காட்சிகளை ஆய்வு செய்ததில், கொள்ளையடித்த செப்புக் கம்பி ரோல்களை லோரியில் ஏற்றுவதற்கு முன்பு, கடையை உடைத்து ஆறு ஆண் சந்தேக நபர்கள் உள்ளே சென்றனர் என்றும் மூன்று சந்தேக நபர்கள் மூன்று தனித்தனி மோட்டார் சைக்கிள்களில் செல்வதைக் கண்டதாகவும்,” அவர் இன்று ஒரு அறிக்கையில் கூறினார்.
குற்றவியல் சட்டத்தின் பிரிவு 457 இன் கீழ் இந்த வழக்கு விசாரிக்கப்பட்டு வருவதாகவும், சந்தேக நபர்களைக் கண்டுபிடிப்பதற்கான விசாரணைகளை போலீஸ் முடுக்கி விட்டுள்ளதாகவும் அட்ஜ்லி கூறினார்.
– பெர்னாமா




















