கோலாலம்பூர், நவம்பர் 16 :
நேற்றிரவு இரவு, அலோர் காஜாவுக்கு அருகிலுள்ள ஜாலான் தாமான் மெர்டேக்கா பெர்டானா சந்திப்பில், பார்வைக்கு இடையூறாக இருந்ததாக, அங்கிருந்த அரசியல் கட்சிக் கொடிகளை அகற்றிய லோரி ஓட்டுநர் ஒருவரை போலீசார் கைது செய்தனர்.
நேற்று இரவு 8.45 மணியளவில் நடந்த இந்தச் சம்பவத்தில், 48 வயதுடைய அந்த லோரி ஓட்டுநர், சாலையில் இருந்த சந்திப்பில் நுழைந்து வெளியேற விரும்பும் சாலையைப் பயனர்களின் பார்வையை இந்த அரசியல் கட்சிக் கொடிகள் மற்றும் பதாகைகள் தடுப்பதனாலேயே, அவர் இவ்வாறு நடந்துகொண்டார் என்று ஆரம்ப கட்ட விசாரணையில் கண்டறியப்பட்டதாக மலாக்கா மாநில காவல்துறைத் தலைவர் அப்துல் மஜித் முஹமட் அலி தெரிவித்தார்.
“கொடி மற்றும் பதாகைகள் சாலைப்பயனர்களின் பார்வைக்கு இடையூறாக இருந்ததால், அந்த ஆடவர் அகற்றினார் ” என்றும் “அவ்வாறு செய்ததன் நோக்கத்திற்கும் அரசியல் கூறுகளுக்கும் எந்த தொடர்பும் இல்லை என்பதை சந்தேக நபர் ஒப்புக்கொண்டார்” என்று அவர் இன்று ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
பாரிசான் நேஷனல் (BN ) சின்னம் கொண்ட 14 கொடிகள், பக்காத்தான் ஹராப்பான் (PH) சின்னம் கொண்ட 8 கொடிகள் மற்றும் 4 பெரிகாத்தான் நேஷனல் (PN) கொடிகள் உள்ளடங்கலாக பல்வேறு கட்சிகளின் 26 கொடிகளை அவர் அகற்றியது போலீஸ் சோதனையில் கண்டுபிடிக்கப்பட்டது.
“சந்தேக நபர் தேசத்துரோக குற்றத்திற்காக தண்டனைச் சட்டம் பிரிவு 427 இன் கீழ் விசாரிக்கப்பட்டார், என்றும் பின்னர் போலீஸ் ஜாமீனில் விடுவிக்கப்பட்டார்,” என்றும் அவர் கூறினார்.
மஜித் கூறுகையில், கொடிகள் மற்றும் அரசியல் கட்சிகளை நாசப்படுத்தும் செயல்கள் தொடர்பாக இதுவரை ஐந்து போலீஸ் புகார்கள் கிடைத்துள்ளன என்றார்.