கோலாலம்பூர், நவம்பர் 16 :
சுமார் 3.6 மில்லியன் EPF பங்களிப்பாளர்கள் தங்கள் சேமிப்பில் 1,000 வெள்ளிக்கும் குறைவான தொகையை வைத்திருக்கின்றனர் என்று நிதி அமைச்சர் இன்று நாடாளு மன்றத்தில் தெரிவித்தார்.
I-Lestari, i-Sinar மற்றும் i-Citra திட்டங்களின் மூலம் மொத்தமாக RM101 பில்லியன் திரும்பப் பெறப்பட்டதைத் தொடர்ந்து, செப்டம்பர் 30 ஆம் தேதி வரையிலான மதிப்பீடுகளின் அடிப்படையில் EPF கணக்குகளில் உள்ள சொற்ப இருப்பு தெரியவந்துள்ளதாக நிதியமைச்சர் தெங்கு டத்தோஸ்ரீ ஜஃப்ருல் டெங்கு அப்துல் அஜிஸ் கூறினார். 6.1 மில்லியன் EPF பங்களிப்பாளர்கள் இப்போது RM10,000க்கும் குறைவான சேமிப்பையே தங்கள் கணக்குகளில் வைத்துள்ளனர் என்றார்.
பூமிபுத்ரா EPF பங்களிப்பாளர்களில் சுமார் 4.4 மில்லியன் அல்லது 54 விழுக்காடு பூமிபுத்ரா உறுப்பினர்கள் இப்போது RM10,000 க்கும் குறைவாகவும், இரண்டு மில்லியன் அல்லது 25 விழுக்காட்டினர் RM1,000 க்கும் குறைவாகவும் இருக்கிறது என்றும் பூமிபுத்ரா உறுப்பினர்களிடையே EPF சேமிப்பு குறைவது மிகவும் ஆபத்தானது என்று அவர் கூறினார்.
“45 முதல் 59 வயதிற்குட்பட்ட செயலில் உள்ள உறுப்பினர்களில் 70 விழுக்காட்டினர் RM50,000 க்கும் அதிகமான சேமிப்பைக் கொண்டுள்ளனர் என்றும் இது ஓய்வு பெறுவதற்கு வசதியான தொகை அல்ல” என்று நாடாளுமன்றத்தில் டத்தோஸ்ரீ டாக்டர் வான் அசிசா வான் இஸ்மாயிலின் (PH-Pandan) கேள்விக்கு பதிலளித்தார்.
இந்த RM50,000 சேமிப்பு என்பது மாதாந்திர RM1,000 செலவினத்தின் படி செய்தால், நான்கு ஆண்டுகளுக்கு மட்டுமே இது போதுமானது அல்லது 20 ஆண்டுகளுக்கு ஒரு மாதத்திற்கு சிறியதொகையாக RM200 மட்டுமே செலவு செய்ய முடியும் என்றும் நிதி அமைச்சர் சுட்டிக்காட்டினார்.
மேலும் அரசாங்கம், EPF உடன் இணைந்து, EPF உறுப்பினர்களின் ஓய்வூதிய எதிர்காலத்திற்காக அவர்களின் சேமிப்பை மீண்டும் கட்டியெழுப்ப உதவும் முயற்சிகளை மேற்கொண்டு வருவதாக அவர் கூறினார்.
மலேசியக் குடும்பத்திற்கான சமூகப் பாதுகாப்பு நிகழ்ச்சி நிரலை வலுப்படுத்த அரசு தனது நிலைப்பாட்டில் உறுதியாக உள்ளது என்றார். இதில் i-Saraaan ஊக்கத்தொகை மற்றும் Kasih Suri Keluarga Malaysia ஆகியவை அடங்கும்.
“மேலும், பிரதமர் தலைமையிலான சமூக பாதுகாப்பு கவுன்சில் மலேசியா (MySPC), தற்போது நாட்டின் சமூக பாதுகாப்பு அமைப்பின் அடிப்படை சீர்திருத்தத்தை ஆய்வு செய்து வருகிறது.” என்றும் அவர் தெரிவித்தார்.





















