துருக்கியே, சிரியாவில் இன்று மீண்டும் 6.4 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இதனால் மக்கள் அதிர்ச்சியில் உறைந்துள்ளனர்.
ஐரோப்பிய மத்தியதரைக் கடல் நில அதிர்வு மையத்தின் கூற்றுப்படி, ஹடாய் மாகாணத்திற்கு அருகிலுள்ள துருக்கியே-சிரியா எல்லைப் பகுதியில் 6.4 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இரவு 8:04 மணிக்கு (17:04 GMT) டிபைன் நகரைத் தாக்கிய நிலநடுக்கம், வடக்கே 200 கி.மீ (300 மைல்) தொலைவில் உள்ள அண்டாக்கியா மற்றும் அடானா நகரங்களில் வலுவாக உணரப்பட்டதாக அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
துருக்கியேயின் தெற்கு ஹடாய் மாகாணமான அனடோலுவில் ஏற்பட்ட இரண்டு புதிய நிலநடுக்கங்களில் குறைந்தது 3 பேர் கொல்லப்பட்டனர் என்றும் 213 பேர் காயமடைந்துள்ளதாகவும், மூன்று இடங்களில் தேடுதல் மற்றும் மீட்பு பணிகள் நடைபெற்று வருவதாகவும் துருக்கி உள்துறை அமைச்சர் தெரிவித்ததாக செய்திகள் வெளியாகி உள்ளன.
முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கடலோரப் பகுதிகளைத் தவிர்க்குமாறு பொதுமக்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மேலும் சேதமடைந்த கட்டிடங்களிலிருந்து விலகி இருக்குமாறும் பிராந்தியத்தில் உள்ள பொதுமக்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
குறைந்தது 46,000 பேரை துருக்கி மற்றும் சிரியா நாடுகள் இழந்த வேதனையிலிருந்து இன்னும் மீளாதநிலையில், மற்றொரு நிலநடுக்கம் அந்நாட்டைத் தாக்கி உள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.