சிரம்பான், நவம்பர் 22 :
வடக்கு-தெற்கு விரைவுச்சாலையின் (PLUS) வடக்கு நோக்கிய 10 KM இல் நேற்று அதிகாலை நடந்த விபத்தில் 3 பேர் உயிரிழந்ததுடன் மூவர் படுகாயமடைந்துள்ளனர்.
நெகிரி செம்பிலான் தீயணைப்பு மற்றும் மீட்புத் துறை உதவி இயக்குநரான அஹமட் முக்லிஸ் மொக்தார் இதுபற்றிக் கூறுகையில், அதிகாலை 2.13 மணிக்கு அந்த விபத்து குறித்து தமது துறைக்கு அழைப்பு வந்தது என்றார்.
“தமக்கு கிடைக்கப்பெற்ற தகவலின்படி சிரம்பான் 2 தீயணைப்பு மற்றும் மீட்பு நிலையத்தின் உறுப்பினர்கள் குழு அந்த இடத்திற்கு விரைந்தது, மேலும் அவர்களுக்கு செனவாங் நிலைய உறுப்பினர்களும் உதவினார்கள்.
“அந்த விபத்து இரண்டு கார்கள் சம்பந்தப்பட்டது. மூன்று ஆண்கள் சம்பவ இடத்திலேயே இறந்தது உறுதி செய்யப்பட்டு, அவர்களின் சடலங்கள் காவல்துறையிடம் ஒப்படைக்கப்பட்டது.
“இதற்கிடையில், பலத்த காயமடைந்த மேலும் மூன்று பாதிக்கப்பட்ட ஆண்கள் சிகிச்சைக்காக மருத்துவக் குழுவிடம் ஒப்படைக்கப்பட்டனர். பாதிக்கப்பட்ட அனைவரும் 20 வயதுக்குட்பட்டவர்கள்” என்றும் அவர் கூறினார்.
மேலும் இவ்விபத்து தொடர்பான விசாரணையை போலீஸ் ஆரம்பித்துள்ளது என்றும் அவர் தெரிவித்தார்.