அம்பாங், நவம்பர் 23 :
உலு லங்காட் மாவட்டத்தில், நேற்று நண்பகல் தொடங்கி பெய்த கனமழை காரணமாக, ஏற்பட்ட வெள்ளத்தைத் தொடர்ந்து 743 பேர் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ளனர். பாதிக்கப்பட்ட அனைவரையும் தங்கவைப்பதற்காக அங்கு மூன்று தற்காலிக வெள்ள நிவாரண மையங்கள் (PPS) திறக்கப்பட்டுள்ளன.
PPS ஆனது அம்பாங்கிலுள்ள பாங்சாபுரி தேச லெம்பா பெர்மாய், செக்கோலா கெபாங்சான் (SK) கம்போங் சுங்கை செராய் மற்றும் கொம்ப்ளெக்ஸ் பெங்குலு முக்கிம் செராஸ் பத்து 10 ஆகிய இடங்களில் இயங்கிவருகிறது.
உலு லங்காட் மாவட்ட பேரிடர் மேலாண்மைக் குழுவின் (JPBD) துணைத் தலைவர் முஹமட் ரசிப் ருபாய் இதுபற்றிக் கூறுகையில் , இன்று காலை 9 மணி நிலவரப்படி, மூன்று PPSகளில் மொத்தம் 743 பாதிக்கப்பட்டவர் தங்கவைக்கப்பட்டுள்ளனர் என்றார்.
“PPS பாங்சாபுரி தேச லெம்பா பெர்மாய், அம்பாங்கில், 127 குடும்பங்களைச் சேர்ந்த 630 பாதிக்கப்பட்டவர்கள் தங்கவைக்கப்பட்டுள்ளனர். இவர்கள் அங்குள்ள 400 வீடுகளில் வசித்துவந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
“PPS (SK) கம்போங் சுங்கை செராய்யில் 83 பேரை உள்ளடக்கிய 29 குடும்பங்கள் தங்கி உள்ளனர் .
“மேலும் கொம்ப்ளெக்ஸ் பெங்குலு முக்கிம் செராஸ் பத்து 10 இல், பாதிக்கப்பட்ட 30 பேர் அடங்கிய 8 குடும்பங்கள் உள்ளனர் ,” என்று தெரிவித்தார்.
இன்று அம்பாங் தீயணைப்பு மற்றும் மீட்பு நிலையத்தின் முகநூலில் பதிவேற்றம் செய்யப்பட்ட அறிக்கையின்படி, நேற்று நண்பகல் பெய்த கனமழையால் கம்போங் லெம்பா ஜெய உதாராவில் ஒரு பகுதியில் வெள்ளம் ஏற்பட்டது என்று குறிப்பிடப்பட்டிருந்தது.