கிறிஸ்துமஸ் காலம் முழுவதும் கோழி மற்றும் முட்டை விலையில் மாற்றம் இல்லை- FLFAM

கோலாலம்பூர்:

இந்த மாதம் முழுவதும் கோழிகள் மற்றும் முட்டைகளின் விலையை பராமரிக்க மலேசியாவின் கால்நடை விவசாயிகள் சங்கம் (FLFAM) உறுதிபூண்டுள்ளது என்று அதன் ஆலோசகர் டான்ஸ்ரீ பிரான்சிஸ் லாவ் கூறினார்.

“இது தொடர்பில் உள்நாட்டு வர்த்தகம் மற்றும் நுகர்வோர் விவகாரங்கள் (KPDNHEP) அமைச்சர் டத்தோஸ்ரீ அலெக்சாண்டர் நன்டா லிங்கியிடமிருந்து கவலைகள் மற்றும் பரிந்துரைகளை நாங்கள் (FLFAM) பெரிதும் பாராட்டுகிறோம். இதனால், கிறிஸ்துமஸ் உள்ளிட்ட இந்த ஆண்டு இறுதி வரை விலை உயர்வு இருக்காது. இது தீபாவளியின் போது அமல்படுத்தப்படும் விலைக் கட்டுப்பாட்டுத் திட்டம் போன்றே இருக்கும்.

“பொதுமக்கள் நிம்மதியாக இருக்கலாம்; கோழி மற்றும் முட்டை விநியோகத்திற்கும் தட்டுப்பாடு இருக்காது, ”என்று அவர் இன்று சங்கத்திற்கும் அமைச்சகத்திற்கும் இடையிலான சந்திப்பின் பின்னர் பெர்னாமாவிடம் கூறினார்.

கோழி முட்டை பண்ணையாளர்களால் ஏற்படும் உற்பத்திச் செலவின் அதிகரிப்பு காரணமாக, கோழி முட்டைகளின் விலைகள் அதிகரித்துள்ளதாக ஊடகங்கள் முன்னதாக செய்தி வெளியிட்டிருந்தன. மேலும் நாட்டின் சில பகுதிகளிலும் கோழியின் விலை கிலோகிராமுக்கு முந்தைய RM7 லிருந்து RM2 வரை அதிகரித்துள்ளது.

கால்நடை வளர்ப்பு நிறுவனங்களின் நடைமுறை, இறக்குமதி, உரம் மற்றும் பூச்சிக்கொல்லி மருந்துகளின் விலை உயர்வு போன்ற காரணங்களால் கோழி மற்றும் காய்கறிகளின் விலை உயர்வுக்குக் காரணம் என்றும் அலெக்சாண்டர் நன்டா கூறியதாகக் கூறப்படுகிறது.

இதற்கிடையில், பிரதமர் டத்தோஸ்ரீ இஸ்மாயில் சப்ரி யாகோப், நாடு முழுவதும் உள்ள அடிப்படைத் தேவைகளை உள்ளடக்கிய “ஜூலான் கெலுவர்கா மலேசியா திட்டம் (Program Jualan Keluarga Malaysia)” விற்பனையை நாளை லெம்பா பந்தாயில் தொடங்கி வைக்க உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது .

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here