கோலாலம்பூர், டிசம்பர் 9 :
லோ டேக் ஜோவின் இருப்பிடத்தை காவல்துறை இன்னும் கண்டுபிடிக்கவில்லை என்று உள்துறை அமைச்சர் டத்தோஸ்ரீ ஹம்சா ஜைனுடின் இன்று நாடாளுமன்றத்தில் அளித்த அறிக்கையில் உறுதிப்படுத்தினார்.
தப்பியோடிய கோடீஸ்வரரான ஜோ லோ தான் கண்டுபிடிக்கப்படுவதைத் தவிர்ப்பதற்காக, இடம் விட்டு இடம் பெயர்ந்துள்ளதாக போலீஸ் விசாரணைகளில் தெரியவந்துள்ளதாக அவர் கூறினார்.
2018 முதல் பிடிபடாமல் தப்பித்துக்கொண்டிருக்கும் குற்றவாளியான ஜோ லோ உண்மையில் சீனாவில் இருந்தாரா என்பதை சரிபார்க்குமாறு அரசாங்கம் கேட்டபோது, வோங் சென் (சுபாங்-PH) க்கு எழுத்துப்பூர்வ நாடாளுமன்றப் பதிலில் ஹம்சா இதை மீண்டும் வலியுறுத்தினார்.
“இப்போது ஜோ லோ மலேசியாவிலோ அல்லது எந்த இடத்திலோ (நீண்ட காலமாக) இல்லை என்று நம்பப்படுகிறது, ஆனால் அவர் தான் கண்டறியப்படுவதைத் தவிர்ப்பதற்காகவும், விசாரணைகளை சிக்கலாக்குவதற்காகவும் ஒரு இடத்திலிருந்து இன்னொரு இடத்திற்கு நகர்ந்து கொண்டேஇருப்பதாக நம்பப்படுகிறது ” என்று அமைச்சர் தெரிவித்தார்.
ஜோ லோவை நாடு கடத்துவதற்கான முயற்சிகள் என்ன என்ற வோங்கின் கேள்விகளுக்கு பதிலளித்த ஹம்சா, அவரது பெயர் இன்டர்போலின் ரெட் அலர்ட் பட்டியலில் இடம் பெற்றுள்ளதாகவும், மலேசியாவிற்கு வெளியே உள்ள அமலாக்க அதிகாரிகளுடன் அவரது இருப்பிடத்தைக் கண்டறிய அமைச்சகம் தொடர்ந்து பணியாற்றி வருவதாகவும் கூறினார்.