கோலாலம்பூர், ஜனவரி 20 :
கல்வி அமைச்சகத்தின் துணை உணவுத் திட்டத்தின் (RMT) கீழ் மாணவர்களுக்கு குழம்புடன் கூடிய வெள்ளை அரிசி சோறு மட்டுமே வழங்கப்படுவதாக சமூக ஊடகங்களில் வைரலாகப் பரவிய குற்றச்சாட்டு குறித்து கல்வி அமைச்சகம் விசாரணை நடத்தி வருகிறது.
சம்பந்தப்பட்ட பள்ளிகளை அடையாளம் காணவும் அறிவுறுத்தியுள்ளதாக மூத்த கல்வி அமைச்சர் டத்தோ டாக்டர் ரட்ஸி கூறினார்.
“நான் குற்றச்சாட்டை தீவிரமாக எடுத்துக்கொள்கிறேன், மேலும் சம்பந்தப்பட்ட பள்ளிகளை அடையாளம் காண்பது உட்பட மேலதிக விசாரணைகளை மேற்கொள்ளுமாறு அறிவுறுத்தியுள்ளேன். மாணவர்களின் நலன் சம்பந்தப்பட்ட விஷயங்களில் கல்வி அமைச்சகம் சமரசம் செய்யாது” என்று அவர் தனது முகநூலில் ஒரு பதிவின் மூலம் தெரிவித்துள்ளார்.
நேற்று, RMT உணவுத் திட்டத்தின் கீழ் மாணவர்களுக்கு வெள்ளை சாதம் மற்றும் குழம்பு மட்டுமே வழங்கப்படுகிறது என்றும் கேன்டீனை விட RMT ஒதுக்கீடு குறைவாக உள்ளதா என்றும் புகைப்படத்துடன் முகநூலில் ஒருவர் பதிவிட்ட இடுகை சமூக வலைதளங்களில் வைரலானது குறிப்பிடத்தக்கது.




















