ஷா ஆலம், ஜனவரி 28 :
நேற்று பிற்பகல் இப்பகுதியில் பெய்த கனமழை மற்றும் ஆலங்கட்டி மழையைத் தொடர்ந்து கம்போங் கெபுன் பூங்கா, பிரிவு 22 இல் உள்ள சுமார் 40 வீடுகள் சேதமடைந்தன.
கம்போங் பத்து 3 இன் தலைவரான முகமட் ஷாபிக் லீ பாஜூனிட் உமர் கூறுகையில், மாலை 5.30 மணியளவில் தொடங்கிய கனமழையுடன் சிறிய சூறாவளி காற்றும் வீசியது, இதனால் கிராமவாசிகளின் வீடுகளின் கூரைகள் காற்றில் அடித்துச் செல்லப்பட்டன.
“இதுவரை, யாருக்கும் எந்த காயமும் ஏற்படவில்லை, மேலும் சமூக நலத்துறையுடன் சேர்ந்து, பாதிக்கப்பட்ட குடியிருப்பாளர்களுக்காக பத்து 3 MBSJ பல்நோக்கு மண்டபத்தில் நிவாரண மையத்தைத் திறந்துள்ளோம்,” என்று அவர் கூறினார்.
அவரது கூற்றுப்படி, ஏற்கனவே கம்போங் கெபுன் பூங்காவிலிருந்த வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களை தங்க வைத்த மையம் இந்த மாத தொடக்கத்தில் மூடப்பட்டது.
மேலும், அக்கிராமத்தில் புயலால் பல மின்கம்பங்கள் சாய்ந்ததையடுத்து, நேற்று நண்பகல் முதல் மின்சாரம் துண்டிக்கப்பட்டதால் கிராமத்தைச் சுற்றியுள்ள பகுதி இன்னும் இருட்டாக இருந்தது.
இந்த ஆலங்கட்டி மழையை இரு தசாப்தங்களாக (இருபது வருடங்கள்) தாம் பார்க்கவில்லை என்றும் இது அவருக்கு புதிது என்றும் அங்கு வசித்துவரும் 43 வயதான ஒரு கிராமவாசி கூறினார் என்பது குறிப்பிடத்தக்கது.