பீஜிங், ஜனவரி 30:
சீனா முழுவதும் 54 பேருக்கு கோவிட்-19 தொற்று உறுதியானதைத் தொடர்ந்து, அங்கு கட்டுப்பாடுகளை அதிகரித்துள்ளது. குறிப்பாக பீஜிங்கில் மட்டும் 20 பேர்களுக்கு கோவிட்-19 தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.
இது கடந்த 2020 ஜூன் மாதத்தில் இருந்து தற்போதைய வரையிலான அதிகபட்ச கொரோனா பாதிப்பு என சீன தேசிய சுகாதார ஆணையம் அறிவித்துள்ளது.
சீனாவில் தலைநகரான பீஜிங்கில் குளிர்கால ஒலிம்பிக் போட்டிகள் தொடங்க இன்னும் சில தினங்களே உள்ளது. அதையும் கருத்தில் கொண்டு மாநகரம் முழுவதும் உச்சகட்ட பாதுகாப்பு மற்றும் கண்காணிப்பு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
பீஜிங் அருகே உள்ள சியோங்கான் பகுதியில் சுமார் 12 லட்சம் பேரை வீடுகளுக்குள் அடைத்து வைத்திருப்பதை சீனா வெளிப்படையாக அறிவிக்கவில்லை என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.
தொழில் நிறுவனங்களை பூட்டுதல், எல்லைக் கட்டுப்பாடுகள் மற்றும் நீண்டகால தனிமைப்படுத்துதல் உள்ளிட்ட நடவடிக்கை அங்கு மேற்கொள்ளப்பட்டுள்ளது.
20 லட்சம் பேர்களுக்கு உடனடியாக கோவிட் -19 பரிசோதனைகள் நடைபெற்றன. மூடப்பட்ட அரங்குகளில் குளிர்கால ஒலிம்பி போட்டி நடத்தப்படும் நிலையில், அந்த பகுதி முழுவதும் கடந்த 4ஆம் திகதி சீல் வைக்கப்பட்டு மற்ற பகுதியில் இருந்து போக்குவரத்து துண்டிக்கப்பட்டுள்ளது.
மூடப்பட்ட விளையாட்டு அரங்குகளுக்குள் இருக்கும் 60,000 பேர் தினசரி சோதனைக்கு உட்படுத்தப்படுகிறார்கள். பீஜிங் நகரம் முழுவதும் கொரோனா தொற்றே இல்லாத நிலையை ஏற்படுத்த தீவிர நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.