கோலாலம்பூர், பிப்ரவரி 10 :
நாளை (பிப்.11) முதல், கல்வி அமைச்சின் கீழ் உள்ள பள்ளிகளின் நுழைவு வாயிலில் செய்யப்படும் உடல் வெப்பநிலை பரிசோதனையை பதிவு செய்ய தேவையில்லை என்று கல்வி அமைச்சகம் இன்று வெளியிட்டுள்ள ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது.
இருப்பினும், பள்ளிகளுக்குச் செல்பவர்கள் பள்ளிக்குள் நுழையும் போது MySejahtera QR குறியீட்டை ஸ்கேன் செய்ய வேண்டும் என்று அது தெரிவித்துள்ளது.
“ஆசிரியர்கள், AKP உறுப்பினர்கள், பள்ளி ஆதரவு சேவை ஊழியர்கள் மற்றும் பார்வையாளர்கள் அனைவரும் டிஜிட்டல் முறையில் தங்களது ஆரோக்கியத்தை சரிபார்த்துக் கொள்ள வேண்டும்.
“பெற்றோர் மற்றும் பாதுகாவலர்களும் பள்ளிகளுக்குச் செல்வதற்கு முன், மாணவர்கள் நல்ல ஆரோக்கியத்துடன் இருப்பதையும், உடல்நலப் பிரச்சனைகளின் அறிகுறிகள் எதுவும் இல்லை என்பதை உறுதிப்படுத்தவும் அறிவுறுத்தப்படுகிறார்கள்” என்று அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
அவ்வாறு ஏதேனும் அறிகுறிகளைக் கொண்ட மாணவர்கள், கோவிட் -19 நோயால் பாதிக்கப்பட்ட குடும்ப உறுப்பினர்களுடன் நெருங்கிய தொடர்பு அல்லது கோவிட் -19 நோயாளியுடன் ஒரே வீட்டில் வசிக்கும் மாணவர்கள் பள்ளிகளுக்குச் செல்ல அனுமதிக்கப்பட மாட்டார்கள் என்று அமைச்சகம் தெரிவித்துள்ளது.
“மாணவர்கள் பள்ளியில் இருக்கும்போது அவர்களின் உடல்நிலை தொடர்ந்து கண்காணிக்கப்படும்.
“பள்ளியில் இருக்கும்போது உடல்நலப் பிரச்சினைகளின் அறிகுறிகள் கொண்டவர்கள் அல்லது வெளிக்காட்டுபவர்கள் மேல் நடவடிக்கைக்காக தனிமைப்படுத்தப்பட்ட அறையில் வைக்கப்படுவார்கள்”.
இந்த புதிய நடைமுறை கல்வி அமைச்சகத்தின் கீழ் பதிவு செய்யப்படாத அனைத்து கல்வி நிறுவனங்களுக்கும் பொருந்தும் என்று அமைச்சகம் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.