உலு லங்காட், மார்ச் 18:
கம்போங் லுபோக் கெலுபி, ஜாலான் பாங்சுனில் நேற்று இரவு பெய்த கனமழையின் காரணமாக ஏற்பட்ட நிலச்சரிவினால் ஒரு வீடு முற்றாக பாதிக்கப்பட்டது.
சிலாங்கூர் தீயணைப்பு மற்றும் மீட்புத் துறையின் இயக்குநர், நோராஸாம் காமிஸ் கூறுகையில், இரவு 8.54 மணிக்கு அவர்களுக்கு அவசர அழைப்பு வந்தது என்றார்.
அவரது கூற்றுப்படி, அந்த அழைப்பினைத் தொடர்ந்து பண்டார் துன் ஹுசைன் ஓன் தீயணைப்பு மற்றும் மீட்பு நிலையத்திலிருந்து 7 உறுப்பினர்கள் இரவு 9.40 மணியளவில் சம்பவ இடத்திற்கு வந்தனர்.
“இந்தச் சம்பவம் அந்த இடத்தில் பெய்த கனமழையைத் தொடர்ந்து ஒரு வீட்டின் அருகே 10 மீட்டர் உயரமுள்ள நிலம் சரிந்தது. மேலும் அப்பகுதியில் 0.2 மீட்டர் உயரத்திற்கு தண்ணீர் தேங்கியது.
பாதிக்கப்பட்ட வீட்டில் வசிக்கும் நான்கு பெரியவர்கள் மற்றும் இரண்டு சிறுவர்கள் என ஆறு குடியிருப்பாளர்களும் அருகிலுள்ள ரிசார்ட்டுக்கு மாற்றப்பட்டனர், அத்தோடு தீயணைப்பு படை தொடர்ந்து அந்த இடத்தில் கண்காணிப்பை மேற்கொண்டு வருகிறது என்றார்.
“இதுவரை அந்த இடத்தில் இடிபாடுகள் எதுவும் கண்டறியப்படவில்லை,” என்று அவர் வியாழக்கிழமை வெளியிட்ட ஒரு அறிக்கையில் தெரிவித்தார்.
வியாழக்கிழமை இரவு அந்த சம்பவ இடத்தில் இரண்டு காவல்துறை அதிகாரிகளும் இருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.